சுற்றுலா வேன் மீது இருசக்கர வாகனம் மோதி கோர விபத்து.. கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!!

Author: Babu Lakshmanan
21 July 2023, 11:11 am
Quick Share

நெல்லை மாவட்டம் மானூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் நேருக்கு நேர் மோதி விபத்து இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராம் (18) மற்றும் உச்சிமாகாளி (18). இவர்கள் இருவரும் நெல்லை மாவட்டம் மானூர் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று கல்லூரி முடிந்ததும் அவர்கள் இருவரும் தங்களது இரு சக்கர வாகனத்தில் சங்கரன்கோவில் சாலை வழியாக அவர்களது ஊருக்கு சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக அழகிய பாண்டிபுரம் அருகே இருசக்கர வாகனம் வரும்போது, எதிரே வந்த சுற்றுலா வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மானூர் போலீசார் விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன், உயிரிழந்த இருவரின் உடலையும் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவர் இருவர் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் வாகனத்தில் அதிவேகமாக வந்ததால் விபத்து நேரிட்டதா..? அல்லது வேன் ஓட்டுனர் கவனக் குறைவாக வாகனத்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Views: - 246

0

0