‘வாயை மூடு’… குறை கூறிய மூதாட்டியை ஒருமையில் பேசிய அமைச்சர் பொன்முடி.. சர்ச்சை வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2023, 9:20 pm
Ponmudi - Updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட 25வது வார்டில் புதிதாக 25.6 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டது.

இந்த பூங்காவை திறந்து வைத்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் க.பொன்முடி. பின்னர், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த அமைச்சர், கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக சென்னையாக இருந்தாலும் சரி, திருக்கோவிலூராக இருந்தாலும் சரி, விழுப்புரமாக இருந்தாலும் சரி வளர்ச்சி அடைந்து வருகிறது என பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது கூட்டத்தில் இருந்த மூதாட்டி ஒருவர், எங்கள் பகுதி குறையாக இருக்கிறது என தெரிவித்தார்.

இதனால் கோபமடைந்த அமைச்சர் மேடையில் இருந்தபடியே குறையாக இருக்கிறதா? வாயை மூடு என ஒருமையில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

பின்னர், அருகில் இருந்தவர்கள் மற்றும் நிர்வாகிகள் மூதாட்டியை அமைதிப்படுத்தியதை அடுத்து அமைச்சர் பொன்முடி மீண்டும் பேசத் தொடங்கினார்.

பின்னர் நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என எனக்குத் தெரிகிறது. ஆயிரம் ரூபாய் எப்போது தருவீர்கள் என்பது தானே என்று கூறி, அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் விரைவில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷரவன்குமார் ஜடாவத் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பொன்முடி சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் கேள்வியெழுப்பிய பெண்ணிடம்., எனக்கென்ன ஓட்டு போட்டு கிழி கிழினு கிழிச்சுட்டியா என கேள்வி எழுப்பினார். அதே போல பேருந்துல மகளிர் இலவச பயணம் குறித்து ஓசி என கூறி சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

Views: - 470

0

0