இனிப்பை விளைவிக்கும் விவசாயிகளுக்கு கசப்பை தரும் கரும்பு… ஒரு கட்டு ரூ.300 வரைக்கும் மட்டுமே விற்பதாக வேதனை!!

Author: Babu Lakshmanan
13 January 2024, 12:35 pm
Quick Share

இனிப்பை விளைய வைக்கும் விவசாயிகளுக்கு கசப்பை தரும் கரும்பு கட்டு 250 ரூபாய் முதல் 300 ரூபாய் விற்பனை செய்வதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் பத்து தாலுகாக்கள் உள்ளன சுமார் 40 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கிராமங்கள் சூழ்ந்த விவசாயம் மாவட்டமாக உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நெல், வாழை, கரும்பு, பூக்கள், காய்கறி, பழங்கள், தென்னை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள், காய்கறிகள், பருத்தி, செங்காந்த மலர், சூரியகாந்தி உள்ளிட்ட அனைத்து பயிர்களும் விவசாயம் செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

தற்போது, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை உலகம் முழுவதும் வரும் 15ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில், பொங்கல் பண்டிகையில் அதிகம் மக்களால் வாங்கப்படும் கரும்பு விவசாயிகள் மிகவும் வேதனையில் உள்ளனர்.

திண்டுக்கல், தாடிக்கொம்பு, ஆத்தூர், அனந்தராயங்கோட்டை, வக்கம்பட்டி, சத்திரப்பட்டி, இடையகோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கரும்பு விவசாயமானது பொங்கல் தினத்தை நம்பி பல்லாயிரம் ஏக்கர் விவசாயம் செய்கின்றனர். தற்போது தொடர் மழை, பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களில் விவசாயத்தையும், தங்களது வாழ்வாதாரத்தையும் பெருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.

தற்போது கரும்பு நல்ல விளைச்சல் கண்டுள்ளது. ஆனால் விலைக்கு வாங்க ஆள் இல்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு 10 கரும்புள்ள ஒரு கட்டு 400 ரூபாய் முதல் 600 ரூபாய் விலைக்கு விற்பனையானது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கரும்புகளை வாங்குவதற்கு வியாபாரிகள் யாரும் முன் வரவில்லை. வரும் வியாபாரிகளும் 250 ரூபாய் முதல் 300 ரூபாய்க்கு கட்டுக்களை வாங்குகின்றனர். 30 கட்டு கொண்ட ஒரு லோடு கரும்பு 8500க்கு விற்பனை ஆகிறது.

வேலை ஆட்கள் கிடைப்பது கிடையாது. அதிக அளவு சம்பளம் கொடுத்து ஆட்களை வரவழைத்து நாங்களும் குடும்பத்துடன் வேலை செய்து வருகின்றோம். பல ஆயிரம் ரூபாய் கடனாக பெற்று விவசாயம் செய்து, கடைசியில் விவசாயிகளுக்கு மீண்டும் கடனை மிஞ்சுகிறது.

அனைவருக்கும் இனிப்பை வழங்கும் விவசாயிகளுக்கு தற்போது கசப்பான பொங்கல் பண்டிகை அமைந்துள்ளது. தமிழக அரசும் நேரடியாக விவசாயிகளிடம் கரும்புகளை கொள்முதல் செய்கிறோம் என்று சொல்கின்றனர். ஆனால் எங்களது பகுதியில் எந்த அரசு அதிகாரியும் நேரடியாக வந்து கொள்முதல் செய்யவில்லை.

தற்போது விளைவித்த கரும்பை கண்டிப்பாக விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக நஷ்டத்தில் கரும்பை விற்பனை செய்து வருகிறோம் என்று வேதனையுடன் விவசாயி தெரிவித்தார்

Views: - 205

0

0