கதவை பூட்டிக்கொண்டு தற்கொலை மிரட்டல்… பெரும் போராட்டத்திற்கு பிறகு மனநலம் பாதித்த இளைஞர் மீட்பு

Author: Babu Lakshmanan
12 January 2024, 5:00 pm
Quick Share

கரூரில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீட்டின் கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த ஜெயம்குளம் கிராமத்தை சார்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் ரஞ்சித் (27). Diploma in civil engineering முடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு, அதற்கான மாத்திரைகள் எடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக நண்பர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு மாத்திரை உட்கொள்ளாததால் மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார். இதனை தொடர்ந்து, திருச்சி மாவட்டம் குணசீலத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல நேற்று பெரியகுளத்திலிருந்து புறப்பட்டு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் தமிழ் நகரில் உள்ள ரவிச்சந்திரனின் அண்ணன் மணி வீட்டிற்கு தனது மகன் மற்றும் மனைவியுடன் வந்துள்ளார்.

இன்று காலையில் காரை வரவழைத்து குணசீலம் செல்ல தயாரான போது, ரஞ்சித் தன் விருப்பத்திற்கு மாறாக எங்கோ அழைத்து செல்கின்றனர் எனக் கூறி கூச்சலிட்டதுடன், வீட்டின் முன்பக்க கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். வீட்டில் இருந்தவர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கதவை திறக்கச் சொல்லினர்.

ஆனால், இளைஞர் ரஞ்சித் திறக்க மறுத்ததால், தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவர்கள் இளைஞரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 10 நிமிடத்தில் திறந்து விடுவதாக கூறி காலம் தாழ்த்தி வந்தார். 1 மணி நேரம் போராடியும் கதவை இளைஞர் திறக்காததால், தீயணைப்பு துறையினர் முன்பக்க கதவை அதிரடியாக உடைத்து உள்ளே சென்று இளைஞரை மீட்டனர்.

அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசாரும், தீயணைப்பு துறையினரும் தயாராக இருந்த 108 ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 260

0

0