என்எல்சி-க்காக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் தமிழக அரசு… இவ்வளவு அவசரம் என்ன வந்துச்சு..? ஜிகே வாசன் கேள்வி…!!

Author: Babu Lakshmanan
28 July 2023, 3:39 pm
Quick Share

என்எல்சி -க்காக விளை நிலங்களை கையகப்படுத்துவது என்பது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாக தமிழக அரசு செய்து இருப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் நடக்கும் என் மண் என் மக்களின் பாதையாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, என்.எல்.சி யில் தொடர்ந்து விளை நிலங்கள் அளிக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்ததாவது :- என்எல்சி – க்காக நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில் தமிழக அரசு இவ்வளவு அவசரம் காண்பிக்க தேவையில்லை. குறிப்பாக விளை நிலங்களை கையகப்படுத்துவது என்பது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாக இருக்கிறது.

உடனடியாக இந்த அவசர பணியை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வளவு அவசரத்திற்கு எந்த விதமான அவசியமும் கிடையாது என்பதுதான் எங்களுடைய கருத்து, எனக் கூறினார்.

I.N.D.I.A. கூட்டணி சார்பில் மணிப்பூரில் சென்று கிரவுண்ட் ரிப்போர்ட் அளிக்கப் போகிறோம் என்று கூறியுள்ளார்கள் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்ததாவது :- மணிப்பூர் விவகாரத்தை பொருத்தவரையில் மத்திய பாஜக தலைமையிலான அரசு உண்மை நிலைகளை பாராளுமன்றத்தில் பேச தயாராக இருக்கின்ற நிலையில், எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்வது என்பது தேவையற்ற ஒன்று. உண்மையான நிலை, பிரச்சனை மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்று நினைக்கக் கூடிய வகையில் எதிர்க்கட்சிகள் செயல்படுவது நிச்சயமாக ஏற்படுவதல்ல.

மணிப்பூரை பொறுத்தவரையில் தற்போது அமைதி தெரிந்து கொண்டு இருக்கிறது என்பதில் மாற்று கருத்து கிடையாது அதை 100% முழுமையாக வேண்டும் என அத்தனை நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இருக்கின்ற நடவடிக்கை அங்கே மக்களுடைய சராசரி வாழ்க்கை தொடங்கி இருப்பதையெல்லாம் பாராளுமன்றத்தில் பேசுவதற்கு தடையாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் நடத்த விடாமல் தடுக்கிறார்கள் என்றால், நிச்சயமாக எதிர்க்கட்சிகள் மணிப்பூரில் சகஜ நிலை திரும்ப கூடிய நிலையை, இந்திய மக்கள் பாராளுமன்றத்தின் மூலம் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது. இதில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன், எனக் கூறினார்.

காவிரி டெல்டா பகுதிகளில் முதல்வர் திறந்து வைத்து இலவச மின்சாரம் வழங்கி உள்ளார் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்ததாவது :- காவிரி டெல்டா பகுதிக்கு காவிரி தண்ணீரை முறையே கர்நாடகா அரசிடம் பேச வேண்டிய நேரத்தில் பேசி விவசாயிகளுக்கு வாங்கிக் கொடுக்காதது தமிழக அரசுடைய மிகப் பெரிய தவறு என்று நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப்பாவி விவசாயிகளை எப்படியாவது ஒரு விதத்தில் நாம் அவர்களை திசை திருப்பலாம் என்று அரசு செய்கின்ற விஷயங்களை அவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். உண்மை நிலையை அவர்கள் மனதில் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள், என்று கூறிவிட்டு கார் மூலம் ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டு சென்றார்.

Views: - 223

0

0