ஸ்டிக்கர் ஒட்டுவதில் மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி.. உயர்நீதிமன்றம் போட்ட கண்டிஷன்!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2024, 8:24 pm
doctor
Quick Share

தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் உள்ளிட்ட ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்து இருக்கிறது. மேலும், மே 1 ஆம் தேதி முதல் இதுபோன்ற ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நல சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே. ஸ்ரீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில், மருத்துவர்கள் விதிமீறல்களில் ஈடுபடவில்லை.

பணி நிமித்தமான அவசர பயணம் செய்வதில் சிரமம் ஏற்படுவதாக மனுதாரர் தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு, ஆம்புலன்ஸ்-க்கு விலக்கு தரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழர்களை அவமானப்படுத்தறீங்க.. இது அரசியலுக்கான போலி தமிழ்ப்பற்று : CM ஸ்டாலின் மீது தமிழிசை காட்டம்!

மருத்துவர்களுக்கு தனியாக விலக்கு தர சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்தது. மனு குறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, மே 22 ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாகனங்களில் மருத்துவர்கள் என்பதை குறிக்கும் ஸ்டிக்கர் ஒட்டியுள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

அதே சமயம், வாகனத்தின் முன்பக்கம், பின்பக்கம் மட்டுமே ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்றும் வாகனத்தின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தாலோ, ஸ்டிக்கர் ஒட்டுவதை தவறாக பயன்படுத்தினாலோ நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், வாகனங்களில் ஸ்டிக்கரை மருத்துவர்கள் தவறாக பயன்படுத்தினாலோ அல்லது மருத்துவர் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் வாகனங்கள் சந்தேகிக்கும் முறையில் இருந்தாலோ காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்த நீதிமன்றம், மருத்துவ கவுன்சிலின் வாதத்தை கேட்ட பிறகு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Views: - 109

0

0