உயிரை பறித்த ஆன்லைன் கடன் செயலி… செல்போனுக்கு வந்த நிர்வாண போட்டோ : அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 July 2023, 10:30 am
Online Loan - Updatenews360
Quick Share

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஏரி வேலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (27) என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் மொபைல் ஆப் மூலம் கடன் வழங்கும் செயலி ஒன்றில் ராஜேஷ் கடன் வாங்கி, வாங்கிய தொகை முழுவதையும் திருப்பி செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் கடன் பெற்ற செயலி மூலமாக மேலும் 15 ஆயிரம் ரூபாய் கேட்டு தொடர்ந்து தொல்லை தரப்பட்டுள்ளது. ராஜேஷ் பணத்தை செலுத்தாத நிலையில் அவரது போட்டோவை நிர்வாணமாக்கி ராஜேஷ் போல சித்தரித்து அதை அவரது மொபைலுக்கே அனுப்பி பணத்தை திருப்பித் தரவில்லை எனில் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிடுவதாக அவர் கடன் பெற்ற செயலி மூலம் மிரட்டப்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த ராஜேஷ் பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து வலங்கைமான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு தரப்பினரும் இதுபோன்று ஆன்லைன் செயலிகள் மூலம் நடைபெறும் குற்றங்களை தடுக்க வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 247

0

0