சாலையில் ஓடிக்கொண்டிருந்த காரில் திடீரென தீவிபத்து : ஓட்டுநர் உள்பட 4 பேர் அலறியடித்து ஓட்டம்..!!

Author: Babu Lakshmanan
19 March 2022, 2:20 pm
Quick Share

சென்னை – மாதவரம் அருகே சாலையில் ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

சென்னை ராயபுரத்தில் உள்ள ட்ராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து வாடகை காரை ஓட்டுநர் மெய்ஞானம் என்பவர் எடுத்து கொண்டு பயணிகளுடன் ஆந்திர மாநிலம் தடா நோக்கி சென்று கொண்டிருந்தார். மாதவரம் ரவுண்டானவை கடந்து செல்லும் போது, கார் பழுதடைந்தது போல இருந்ததால், சாலையோரம் வாகனத்தை நிறுத்தி எஞ்சின் முன்பக்கத்தை திறக்க முற்பட்ட போது தீப்பற்றியுள்ளது.

இதனையடுத்து காரில் இருந்த பயணிகள் மூவர் கீழே இறங்கி, ஓட்டுநர் என 4 பேரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நண்பகல் உச்சி வெயிலில் கடும் அனல் காற்று வீச தொடங்கியுள்ள நிலையில், கார் முழுவதும் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து தகவலறிந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக அந்த சாலையில் போக்குவரத்தை நிறுத்தினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சசி அடித்து தீயை அணைத்தனர். எனினும் கார் முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் தீப்பற்றிய நிலையில் 4 பேர் உடனடியாக ஓட்டம் பிடித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

Views: - 526

0

0