திரும்பத் திரும்ப சண்டை… அரிவாளை கையில் எடுத்த கணவன்… மனைவி ஓட ஓட வெட்டிக்கொலை ; ஸ்ரீவைகுண்டம் அருகே பயங்கரம்!

Author: Babu Lakshmanan
31 October 2023, 6:02 pm
Quick Share

தூத்துக்குடி ; ஸ்ரீவைகுண்டம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கணவன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணை சர்ச் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் ராஜ்குமார். ராஜ்குமார் மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மீனா (28). இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு சுதர்சன், பாலகிருஷ்ணன் என்ற இரு மகன்களும், பவித்ராதேவி என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஒரு வருட காலமாக ராஜ்குமாருக்கும், அவரது மனைவி மீனாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இன்று காலை 9 மணி அளவில் மீனா தனது மகன்கள் மற்றும் மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டில் இருந்துள்ளார். அப்போது, வெளியே இருந்து வந்த கணவர் ராஜ்குமாருக்கும், மீனாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

அந்த சமயம், வீட்டில் இருந்த அரிவாளால் மீனாவை வெட்ட முயன்றுள்ளார் ராஜ்குமார். அதற்குள் மீனா வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். ஆனாலும், விடாமல் பின்னால் வந்து தலையில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் வீட்டின் வாசலில் மீனா சரிந்து விழுந்தாள். அதன்பின் அரிவாளால் மீனாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், மீனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின்னர் ராஜ்குமார் அங்கிருந்து தப்பியோடினார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் முறப்பநாடு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முறப்பநாடு போலீசார் மீனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடி கணவர் ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.

குடும்பத்தகராறு தான் காரணமாக அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியை கணவன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 436

0

0