கூட்டுறவு சங்கத்தில் கடன் கொடுக்க லஞ்சம் : திமுக ஒன்றிய செயலாளர் மீது குற்றச்சாட்டு.. கால்நடை விவசாயிகள் முற்றுகை..!!

Author: Babu Lakshmanan
5 May 2023, 9:15 pm
Quick Share

தூத்துக்குடி ; கோவில்பட்டி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் கொடுக்க லஞ்சம் கேட்பதாக திமுக ஒன்றிய செயலாளர் மீது குற்றம்சாட்டிய பொதுமக்கள், சங்கத்தினை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வரதம்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு கடன் கொடுக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும், சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் கடன் கொடுப்பதாக கூறி அப்பகுதி மக்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வரதம்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக திமுக ஒன்றிய செயலாளர் முருகேசன் என்பவர் இருந்து வருகிறார். செயல் அலுவலராக வீரப்பன் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்த சங்கத்தினை வரதம்பட்டி, உருளைகுடி, பீக்கிலிபட்டி, பனைப்பட்டி, அய்யாக்கோட்டையூர், வெங்கடசலாபுரம், மீனாட்சிபுரம், காட்டுராமன்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பயன்படுத்தி வருகின்றனர்.

தற்பொழுது வரதம்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கால்நடை வளர்ப்பவர்களுக்கு கால்நடை மூலதன கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு அக்கிராமத்தினை சேர்ந்த கால்நடை வளர்க்க கூடியவர்கள் பலரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்நிலையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் வீரப்பன் ஆகியோர் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் கடன் தருவதாகவும், மேலும் கடன் தர ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டி, அப்பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள், மேலும் கடன் கேட்டு விண்ணப்பம் செய்தவர்கள் வரதம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “தலைவர், செயலாளர் தங்களுக்கு வேண்டியவர்கள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டும் கடன் கொடுத்து வருகின்றனர். யாருக்கும் பாகுபாடு இல்லாமல் விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் கடன்கொடுக்க வேண்டும், கடந்த 3 நாள்களாக கடன் கேட்டு அலைந்து வருவதாகவும், சரியான பதில் கூறமால், எங்கு வேண்டும் என்றாலும் புகார் கொடுங்கள் என்று அலட்சியமாக பதில் கூறுகின்றனர்,” என தெரிவித்துள்ளனர்.

இப்பிரச்சினை குறித்து வரதம்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் வீரப்பனிடம் கேட்ட போது, ஏற்கனவே கடன் பெற்று கட்டியவர்களுக்கு முதலில் கடன் வழங்க வேண்டும் என்று முடிவு செய்து 44 பேருக்கு வழங்கவுள்ளதாகவும், தங்களுக்கு 65 லட்ச ரூபாய் தான் கடன் தொகை கொடுக்க முடியும், புதியதாக விண்ணப்பம் செய்தவர்களுக்கு கடன் கொடுக்க கூடுதல் தொகை கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி பெற இருப்பதாகவும், கூடுதல் தொகை வந்ததும் புதியதாக விண்ணப்பம் செய்தவர்களுக்கு கடன் வழங்கப்படும் என்றும், 5 ஆயிர ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறுவது தவறான தகவல் என்று தெரிவித்தார்.

Views: - 337

0

0