கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு அரிவாள் வெட்டு… வீடு தேடிச் சென்று கணவர், மாமனார் வெறிச்செயல்…!

Author: Babu Lakshmanan
13 June 2023, 7:37 pm
Quick Share

தூத்துக்குடியில் இளம் பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக அவரது கணவர் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் நேரு காலணியை சேர்ந்தவர் மகாராஜன் (37). கொல்லுபட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அன்பு (32). இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.

இதனால் மன வருத்தம் அடைந்த அன்பு ஒரு வருடத்திற்கு முன்பு தாளமுத்து நகரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால், மகாராஜன் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மகாராஜன் மற்றும் அவரது அப்பா சுடலைமுத்து (65) இருவரும் அன்பு வீட்டுக்கு நேரில் சென்று அங்கிருந்த அன்புவை அரிவாளால் இருவரும் சேர்ந்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் தலை கை கால் உட்பட பல இடங்களில் வெட்டு காயம் பட்ட அன்பு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப் பதிவு செய்து மகாராஜன் மற்றும் சுடலைமுத்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Views: - 380

0

0