கொளுத்தும் வெயிலால் மயங்கி விழுந்த மனநிலை பாதித்த பெண்… முதலுதவி கொடுத்து உதவிய பெண் காவலர் ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
18 April 2023, 12:26 pm
Quick Share

திண்டுக்கல் ; திண்டுக்கல் மேற்கு ரத வீதி பகுதியில் வெயிலில் தாக்கம் அதிகமானதால் மயங்கி விழுந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவிய போக்குவரத்து பெண் காவலர் சமூக வலைதளங்களில் வீடியோ காட்சிகள் வைரலாகிறது.

திண்டுக்கல் போக்குவரத்து காவல் துறையில் காவலராக பேபி என்பவர் பணி செய்து வருகிறார். இவர் மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்தை சீர்செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மேற்குரத வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளி அருகில் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்ததால் தள்ளாடியபடி நடந்து சென்ற மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி திடீரென மயங்கி விழுந்தார்.

இதைக் கண்ட பெண் காவலர் பேபி உடனடியாக அங்கு இருந்தவர்கள் உதவியுடன் அந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு முதலுதவி அளித்ததோடு, அவருக்கு ஆடைகள் வாங்கி அணிவித்து அவரை சுத்தம் செய்து தண்ணீர் கொடுத்து உதவி செய்தார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி போக்குவரத்து பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Views: - 381

0

0