கைதாக மாட்டோம்… அடம்பிடித்த பாஜகவினர் ; தாசில்தார் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து நடந்த போராட்டத்தில் சலசலப்பு..!

Author: Babu Lakshmanan
25 October 2023, 2:04 pm
Quick Share

திருச்சியில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய போது, கைதாக மாட்டோம் என அடம்பிடித்த பாஜகவினர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜாமலை பகுதியில் பக்கிரிசாமி, கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தனர். கடந்த 2012-ம் ஆண்டு இவர்கள் கனரா வங்கியில் ரூ. 22 கோடி கடன் வாங்கினர். பின்னர் 2019-ம் ஆண்டு நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

இதனையடுத்து, வங்கியில் பெற்ற கடனுக்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவின்படி காஜாமலை பகுதியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான ரூ. 44 லட்சம் மதிப்புள்ள வீட்டை மண்டல துணை தாசில்தார் பிரேம்குமார், கனரா வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்ய சென்றனர்.

அப்போது, அடையாளம் தெரியாத 20க்கும் மேற்பட்ட நபர்கள் சரமாரியாக உருட்டு கட்டைகளால் துணை தாசில்தாரையும், வங்கி ஊழியர்களையும் சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்த துணை தாசில்தார் பிரேம்குமார், வங்கி ஊழியர்கள் படுகாயத்துடன் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை காவல்துறை தரப்பில் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்து பாஜக மாவட்ட தலைவர் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். காவல்துறை அனுமதி இல்லை என கூறி அவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது, பாஜக நிர்வாகிகளுக்கும், காவல் துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

30 நிமிடங்களுக்கு மேலாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பாஜகவினர் கைதுக்கு ஒத்துழைக்காமல் அடம்பிடித்தவாறு கலைந்து சென்றனர்.

Views: - 229

0

0