‘என்னை மீறி ஏலம் எடுத்தால் கொன்று விடுவேன்’… திமுக ஒன்றிய செயலாளர் கொலை மிரட்டல் ; எஸ்பி-யிடம் பாதிக்கப்பட்டவர் புகார்…!!

Author: Babu Lakshmanan
21 June 2023, 11:41 am
Quick Share

திருச்சி ; திருச்சி அருகே கொலை மிரட்டல் விடுத்த திமுக ஒன்றிய செயலாளர் முத்து செல்வன் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி இடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், துறையூர் உப்பிலியபுரம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் நடராஜன் இவர் இன்று காலை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி சுஜித்குமாரிடம் புகார் மனு ஒன்றை அளிக்க வந்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- திருச்சி துறையூர் உப்பிலியபுரம் திமுக ஒன்றிய செயலாளராக இருப்பவர் முத்து செல்வம். இவரது மனைவி ஹேமலதா. இவர் உப்பிலியபுரம் சேர்மனாக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த மாதம் 19ஆம் தேதி உப்பிலியபுரம் ஒன்றிய அலுவலகத்தில் பழைய டாட்டா சுமோ வாகனம் ஏலம் எடுப்பதற்காக, நான் உள்பட சிலர் ரூபாய் 10 ஆயிரம் முன்பணம் கட்டி இருந்தோம்.

இந்நிலையில் ஏலம் எடுக்க நான் உப்பிலியாபுரம் அலுவலகம் சென்றபோது, அங்கு வந்த உப்பிலியபுரம் திமுக ஒன்றிய செயலாளர் முத்து செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்னிடம் என்னை மீறி யாரும் ஏலம் எடுக்கக் கூடாது. அப்படி ஏலம் எடுப்பவர்களை கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.

மேலும், இது சம்பந்தமாக உப்பிலியபுரம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவலர்களுடன் சென்று பார்வையிட சென்றபோது சிசிடிவி காட்சிகளை முறைகேடாக அழித்துவிட்டனர். மேலும், கடந்த 17ஆம் தேதி உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் முன்னிலையில் ஒன்றிய செயலாளர் முத்து செல்வம் எனக்கு மிரட்டல் விடுத்தார். எனவே, எனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.

Views: - 424

0

0