சூரியூர் ஜல்லிக்கட்டில் விதவிதமான பரிசுகள்…. முதல் பரிசாக பைக்கை தட்டிச் சென்ற காளையர்… காளைகளுக்கும் சிறப்பு பரிசுகள் !!

Author: Babu Lakshmanan
16 January 2024, 8:17 pm
Quick Share

திருச்சி ; திருச்சி ஜல்லிக்கட்டு விழா வெற்றி பெற்ற வீரர்களுக்கு இருசக்கர வாகனம், வீட்டுமனை மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டது.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியானது காலை 7.50 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் ஸ்ரீநற்கடல் குடி கருப்பண்ணசாமி கோவில் மாடு முதலில் அவிழ்த்து விடப்பட்டது. அதன் பிறகு முறையாக ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

இந்த போட்டியை திருச்சி ஆர்டிஒ பார்த்தீபன் தொடங்கி வைத்தார். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில், பீரோ, தங்க காசு, வெள்ளி காசு, ரொக்கம் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் அதிக காளைகளை அடக்கிய நாமக்கல்லை சேர்ந்த கார்த்திக் என்ற வீரருக்கு திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் பைக்கை பரிசாக வழங்கினார். அதேபோல் சிறந்த காளையாக இலந்தப்பட்டியை சேர்ந்த தமிழ் என்பவரின் காளைக்கு வீட்டுமனை முதல் பரிசாகவும், இரண்டாவது சிறந்த காளைக்கு செங்குறிச்சியை சேர்ந்த கருப்பையா என்பவரின் காளைக்கு தங்க மோதிரமும், மூன்றாவது சிறந்த மாட்டிற்கான பரிசாக நரியப்பட்டி சேர்ந்த தனபால் என்பவரது காளைக்கு 10ஆயிரம் ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு 358 மாடுபிடி வீரர்கள் 7 சுற்றுகளாக கலந்து கொண்டனர். இதில் 658 ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவெறும்பூர் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் துவாக்குடி போக்குவரத்து ஆர்ஐ ரத்தினம் உட்பட 72 பேர் காயமடைந்தனர்.

மாடுபிடி வீரர்கள் 18 பேர், மாட்டின் உரிமையாளர் 32 பேர், பார்வையாளர்கள் 20 இரண்டு போலீஸ்காரர் என 72 பேர் காயமடைந்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருவெறும்பூர் ஏடிஎஸ்பி கோபாலசந்திரன் தலைமையில் டிஎஸ்பி 4 இன்ஸ் பெக்டர் 7 டாக்டர் 24 உட்பட சுமார் 191 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சூரியூர் மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களிக்கும் விதமாக கேலரிகள் மற்றும் தடுப்பு வேலியை அருகில் வாகனங்களை பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் சார்பில் நிறுத்தி இருந்தனர்.

Views: - 276

0

0