குளிர்பானத்தில் மது கலந்து சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் திருப்பம் : சிக்கிய குற்றவாளிகள் அளித்த வாக்குமூலம்!

Author: Udayachandran RadhaKrishnan
16 November 2022, 11:05 am
Gang Rape - Updatenews360
Quick Share

திருச்சி அருகே சிறுமியை 5 வாலிபர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்து 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகாவை சேர்ந்த 16வயதுடைய சிறுமியை முசிறி அந்தரபட்டியை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ரெங்கநாதன் (வயது 21) தனது இருசக்கர வாகனத்தில் காவிரி கரையோரத்தில் உள்ள தைலமரகாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சிறுமிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ரெங்கநாதன் சிறுகாம்பூர் அருகே செங்கொடி குடித்தெருவை மணி (எ) மணிகண்டன் உட்பட 4 நண்பர்களை வரவழைத்துள்ளார்.

பின்னர் 5பேரும் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அதனை செல்போனில் வீடியோவாகவும் படம் எடுத்துள்ளனர்.

பின்னர் வாலிபர்கள் சிறுமியை மிரட்டி வீடியோ படத்தை வெளியிட்டு விடுவேன் என கூறி மீண்டும் வெவ்வேறு இடங்களுக்கு வரவழைத்து மூன்று முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

கடந்த வருடம் சித்திரை மாதம் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிவதை கண்ட அவரது பெற்றோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

குழந்தை திருமணம் குறித்து தகவல் அறிந்த சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து சிறுமியை மீட்டு திருச்சியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

தற்போது வரை சிறுமி காப்பகத்திலேயே இருந்து படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டதில் ஐந்து பேரில் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ வாட்ஸப் வைரலாக பரவியது. அதனைக் கண்ட சிறுமியின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளை நாசம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தார்.

இதையடுத்து காப்பகத்தில் இருந்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மகளிர் காவல்துறையினர் சிறுமி விசாரணைக்கு அழைத்து வந்து நடந்த விபரங்களை கேட்டு புகார் மனு பெறப்பட்டது.

புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து முசிறி
அந்தரபட்டியை சேர்ந்த ரெங்கநாதன் மற்றும் சிறுகாம்பூரைச் சேர்ந்த மணி என்ற மணிகண்டன், தர்மா (எ) கணேஷ் உள்ளிட்ட மூவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மேலும் இருவர் மீதும் வழக்கு பதிந்து அவர்களை தேடி வரும் நிலையில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
கடந்த வருடம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவரை காவல்துறையினர் தேடி வருவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 437

0

0