சுங்க கட்டணம் வசூலிப்பதில் வாக்குவாதம்… சுங்கச்சாவடியை அடித்து உடைத்த 10 பேர் கொண்ட கும்பல் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!!

Author: Babu Lakshmanan
7 March 2024, 11:10 am
Quick Share

நத்தம் அருகே பரளிபுதூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலிப்பதில் வாக்குவாதம் நடந்த நிலையில், சுங்கச்சாவடியை 10 பேர் கொண்ட கும்பல் அடித்து உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ளது பரளிபுதூர் பகுதியில் மதுரை – நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியில் அருகே உள்ள வத்திப்பட்டி பகுதியைச் சேர்ந்த கழிவுநீர் வாகனத்தை ஓட்டி வந்த நபருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில், வாக்குவாதம் முற்றியதில் கோபமடைந்த கழிவுநீர் வாகன ஓட்டுநர் அங்கிருந்து கிளம்பி சென்ற சிறிது நேரத்தில், இருசக்கர வாகனத்தில் 10க்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட கும்பல் அங்கு வந்தது. சுங்கசாவடி பகுதியில் இருசக்கர வாகனத்தை கொண்டு வாகனங்களை செல்லவிடாமல் மறித்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்டனர்.

மேலும், சுங்கச் சாவடியில் இருந்த கேமராக்கள், தடுப்புகள், பூந்தொட்டிகள் உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மதுரை-நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நத்தம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலேயே இந்த சுங்கச்சாவடியில் தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Views: - 77

0

0