மீண்டும் மீண்டுமா..? காவலாளியின் வாயில் மதுவை ஊற்றி டாஸ்மாக்கில் கொள்ளை… பல லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் திருட்டு!!

Author: Babu Lakshmanan
22 May 2023, 1:01 pm
Quick Share

நெல்லை ; தெற்கு வள்ளியூரில் டாஸ்மாக் காவலாளி வாயில் மதுவை ஊற்றி மிரட்டி டாஸ்மாக் பூட்டை உடைத்து பல இலட்சம் மதிப்பிலான மதுபானம் கொள்ளையடிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூரில் இருந்து வடலிவிளை செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று இரவு வியாபாரம் முடிந்தவுடன் டாஸ்மாக் கடையை அடைத்து விட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர். டாஸ்மாக் கடையின் காவலாளியான அதே பகுதியை சேர்ந்த தேவராஜ்(வயது 60) என்பவர் காவல் பணியில் இருந்தார்.

இந்த நிலையில் நள்ளிரவு 3 பேர் கொண்ட கும்பல் டாஸ்மாக் கடைக்கு வந்தனர். திடீரென அந்த கும்பல் காவலாளி தேவராஜ்யை மிரட்டி அவரை பிடித்து வாயில் மதுவை ஊற்றி, அதன் பின்னர் அந்த கும்பல் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து, ஷட்டரை இரும்பு கம்பி மூலம் நெம்பியுள்ளனர். அதன்பின்னர் ஷட்டரை திறந்து உள்ளே புகுந்த அந்த கும்பல் அங்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த மதுபாட்டில்களை சாக்கு பையில் கட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

கொள்ளை போன மதுபாட்டில்களின் மதிப்பு பல இலட்சம் ஆகும். ஏற்கனவே இதே மதுபான கடையில் கடந்த 15ம் தேதி இதே போன்று காவலாளியை கத்தியை காட்டி மிரட்டி மதுபானங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தற்போது அதே கும்பல் மீண்டும் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தை இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது.

பணகுடி போலீசார் தொடர்ந்து இரண்டாவது முறையாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Views: - 307

0

0