பிரதமருக்காக பாஜக வைத்த பேனரில் விசிக கொடி : பாஜக – விசிக நிர்வாகிகள் குவிந்ததால் நள்ளிரவில் பரபரப்பு..!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2022, 10:52 am
BJp - Vck -Updatenews360
Quick Share

பழனியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் வைத்த பேனர் மீது விசிகவினர் கொடி கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

நாடு முழுவதும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதேபோல தந்தை பெரியாரின் பிறந்த நாளும் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு பழனியில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தி பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்துள்ளனர். பழனி ரயில்வே பீடர் சாலையில் மின்சார வாரியம் அருகே பாஜக சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
அப்பகுதியிலேயே பெரியாரின் சிலையும் உள்ளதால் திராவிடர் கழகத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் தங்களது கட்சி கொடிகள் மற்றும் பிளக்ஸ் பேனர்களை வைத்தனர்.

அப்போது‌ பாஜகவினர் வைத்த பேனரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை கட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை எடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பாஜகவினரின் பிளக்ஸ் பேனரியில் கட்டப்பட்ட கொடியை அகற்றுமாறு எச்சரித்தனர்.

ஆனால் கொடியை அகற்ற மறுத்து திக மற்றும் விசிகவினர் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினரே கொடியை அகற்றினர்.

இது குறித்து தகவல் அறிந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் குவிந்தனர். இதையடுத்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து காவல்துறையினர் பாரதிய ஜனதா கட்சியினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பாரதிய ஜனதா கட்சியினர் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பதாகவும், பாஜக வினரின் பிளக்ஸ் பேனரை வேறு இடத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும் சம்மதித்தனர்.

தொடர்ந்து பாஜகவினர் அனைவரும் கலந்து சென்றதை அடுத்து, அங்கு நின்றிருந்த திராவிடர் கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரையும் போலீசார் கலைத்தனர். இதனால் அங்கு ஏற்பட்டிருந்த பதற்றம் சற்று தணிந்தது.

Views: - 462

0

0