அழிவு பாதையை நோக்கி செல்லும் தமிழகத்தை காக்க வேண்டும் : திமுக அரசுக்கு எதிராக கோவையில் பாஜக ஆர்ப்பாட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2023, 8:17 pm
Cbe Bjp - Updatenews360
Quick Share

கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறிய அரசை கண்டித்து பா.ஜ.க சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில விவசாயிகள் அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு எதிராகவும், திமுக அரசை கண்டித்தும் பாஜகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாகவும், அதை தடுக்க உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் போது பேட்டியளித்த பாஜகவின் மாநில விவசாயிகள் அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், தமிழகத்தில் கள்ள சாராய விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும்.

டாஸ்மாக் கடைகளையும் குறைக்க வேண்டும் என அரசுக்கு இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. அழிவு பாதையை நோக்கி தமிழகம் சென்று கொண்டு இருக்கிறது.

கள்ளசாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் வழங்கி இருக்கும் அரசு, விபத்துகளில் உயிரிழப்பவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதில்லை.

பல ஆண்டுகளாக கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருக்கின்றோம், கள் ஒரு சத்தான உணவு, அதற்கான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை.

ஆனால் மிகவும் உடலுக்கு கெடுதியான சாராயத்தை முன்னெடுத்து கொண்டு இருக்கின்றது’ என தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர்.

Views: - 301

0

1