15 ஏக்கரில் இருந்த ஏரி எங்கய்யா போச்சு? ஆக்கிரமிப்பால் காணாமல் போன ஏரி : புகாரால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2024, 2:46 pm
Lake Miss
Quick Share

15 ஏக்கரில் இருந்த ஏரி எங்கய்யா போச்சு? ஆக்கிரமிப்பால் காணாமல் போன ஏரி : புகாரால் பரபரப்பு!

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பாப்பிசெட்டிப்பட்டி கிராமத்தில் சுமார் 15 ஏக்கர் அளவில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியானது பல ஆண்டுகளாக பாப்பிசெட்டிப்பட்டி ,பெத்தூர்,கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட ஏழு கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கிய வந்தது.

இந்த நிலையில் இந்த ஏரியில் சுற்று வட்டார பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகளின் ஆக்கிரமிப்பால் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த ஏரி தற்போது ஒரு ஏக்கரில் மட்டுமே இருப்பதாகவும் இதனால் தங்கள் கிராமத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக இளைஞர்களும் கிராம மக்களும் மனம் நொந்து தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக ஏரியை ஒட்டியுள்ள விவசாயிகள் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து அதில் நெல் கரும்பு பருத்தி உள்ளிட்ட விவசாய பயிர்களை பயிரிட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வதாகவும். மேலும் ஏரிக்கு வரும் ஓடைகளையும் அடைத்து நீர் வருவதற்கு வழி இல்லாமல் விவசாயிகளால் தடை செய்யப்பட்டுள்ளது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

இது மட்டுமின்றி இந்த ஏரியில் அமைக்கப்பட்ட நான்கு ஆழ்துளை கிணறுகளையும் கல் போட்டு அடைத்ததாக புகார் தெரிவித்துள்ளனர். தற்போது நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறை குடும்ப பெண்களையும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளையும் பொதுமக்களையும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து ஏரியை காணவில்லை என கிராம மக்கள் ஏற்கனவே வட்டாட்சியரிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல இந்த ஏரியை தூர்வாரி இங்குள்ள கருவேல மரங்களை அகற்றியும் ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வழிவகை செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அதே போல தங்கள் கிராமத்தில் உள்ள பெண்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை கொடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது என கோரிக்கை விடுத்துள்ளனர் பாப்பிசெட்டிப்பட்டி கிராம மக்கள்.

Views: - 420

2

0