‘உங்க மோரும், ரூ.50ம் எங்களுக்கு வேணாம்’.. குறைகளை கேட்க வந்த திமுக எம்எல்ஏ… கேள்வி கேட்டு திகைக்க வைத்த பெண்கள்…!!

Author: Babu Lakshmanan
21 July 2023, 2:22 pm
Quick Share

திருவள்ளூர் ; சாலை எங்கே.. ?, அரசு வீடு எங்கே.. ?, இப்போது மட்டும் எதுக்கு வர்றீங்க…? என்று மாதவரம் திமுக சட்டமன்ற உறுப்பினரை பெண்கள் சரமாரியாக கேள்வி கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் காரனோடை சோத்து, பெரும்பேடு ஆகிய ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் கூலி தொழிலாளர்களை திமுக மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்
சுதர்சனம் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, பணியில் ஈடுபட்டிருந்த அப்பகுதி மக்கள், தங்கள் பகுதியில் சாலை முறையாக அமைக்கவில்லை என்றும், மழைக்காலங்களில் தண்ணீரில் நடந்து செல்வதாகவும், இப்போது, மட்டும் ஏன் வந்தீர்கள் எனக் கேள்வி எழுப்பினர்.
30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அரசு தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும், அந்த வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

தொடர்ந்து, தக்காளியின் விலை ஏறிவிட்டது எனவும், தாங்கள் வாங்கும் 250 ரூபாய் பணத்தில் தக்காளி வாங்க முடியுமா..? என அவரிடம் கேள்வி கேட்டனர். இதனை எதிர்பார்க்காத எம்எல்ஏ சுதர்சனம், அனைவரும் அரை கிலோ தக்காளி வாங்கிக் கொள்ளுங்கள், நான் ஐம்பது ரூபாய் தருகிறேன் எனக் கூறினார்.

தொடர்ந்து, மோர், பிஸ்கட் போன்றவற்றை அவர்களிடம் வழங்கினார். இதனை ஏற்க மறுத்த பெண்கள், உங்க மோரும், ரூ.50 பணமும் எங்களுக்கு வேணாம், என முனுமுனுத்தனர்.

குறை கேட்க வந்த மாதவரம் சட்டமன்ற உறுப்பினரை பெண்கள் சூழ்ந்து கொண்டு, சரமாரியாக பல்வேறு குறைகளை தெரிவித்ததால், அவர்களிடம் சாதுரியமாக 50 ரூபாய் கொடுத்து நகைச்சுவையாக பேசி அங்கிருந்து நைசாக நழுவி சென்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 254

0

0