ரூ.1000 கோடி வரி ஏய்ப்பு முறைகேடு…? திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் வீட்டில் நடந்த ரெய்டில் அம்பலம் ; வருமான வரித்துறையின் முழு ரிப்போர்ட்..!!!

Author: Babu Lakshmanan
9 October 2023, 10:02 pm
Quick Share

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.1000 கோடி வரைக்கும் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்தது. அதன் பேரில், அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளதாகக் கூறி, திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கம் செய்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5ம் தேதி அதிகாலை முதல் 5வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது வீட்டில் கணக்கில் வராத ரூ.1.20 கோடி பணம் கட்டு கட்டாக எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

ஜெகத்ரட்சகன் மகளின் வீட்டில் இருந்து 2.45 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கட்டு கட்டாக 2000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகயுள்ளது. அதே போல, சவீதா மருத்துவமனையின் பிண அறையில் இருந்து கட்டு கட்டாக ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, ஜெகத்ரட்சகனின் மருமகன் நாராயணசாமி இளமாறனிடம்வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.1000 கோடி வரைக்கும் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சவிதா குழுமம் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும், சோதனையில் 18 கிலோ தங்க நகைகள் சிக்கியுள்ளதாகவும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 275

0

0