எமனாக வந்த பள்ளி வாகனம்…ரிவர்ஸ் எடுக்கும்போது சக்கரத்தில் சிக்கிய சிறுவன்: சென்னை தனியார் பள்ளியில் அதிர்ச்சி…அறிக்கை அளித்த உத்தரவு..!

Author: Rajesh
28 March 2022, 1:48 pm
Quick Share

சென்னை: சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி வேன் மோதி 2ம் வகுப்பு மாணவர் தீக்சித் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் தீக்சித். ஆழ்வார் திருநகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேசன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று வழக்கம்போல், மாணவர் தீக்சித் பள்ளி வேனில் பள்ளிக்கு வந்துள்ளார் . வேனில் இருந்து மற்ற மாணவர்கள் இறங்கி சென்றபோது, வேனில் தான் மறந்து வைத்துவிட்டு வந்த பொருளை எடுப்பதற்காக பள்ளி வேனை நோக்கி ஓடி வந்துள்ளார் தீக்சித்.

மாணவர்கள் அனைவரும் இறங்கி விட்டதால் வேனை பார்க்கிங்க செய்வதற்காக வாகன ஓட்டுநர் பூங்காவனம் வேனை ரிவர்ஸ் எடுத்துள்ளார். அந்த சமயத்தில் வேன் நகர்ந்ததால், வேனில் ஏற முயற்சித்த மாணவர் தீக்சித் தவறி கீழே விழுந்து வேனில் சிக்கியுள்ளார்.

வாகனத்தின் சக்கரம் பள்ளி மாணவன் தீக்சித் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தீக்சித் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து உடனே வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பள்ளி வாகன ஓட்டுனரான முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பூங்காவனம் என்பவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில காலத்திற்கு முன் பள்ளி வாகனங்களில் சிக்கி குழந்தைகள் உயிரிழப்பது தொடர் கதையாகி வந்த நிலையில், கொரோனா ஊரங்கால் பள்ளிகள் மூடப்பட்டு சமயத்தில், இதுபோன்ற துயர சம்பவங்கள் நிகழாமல் இருந்தது. தற்போது, மீண்டும் பள்ளி சக்கரத்தில் பிஞ்சு சிறுவன் உயிரை விட்ட சம்பவம் பெற்றோர்கள் இடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் கிளீனர்களின் கவனக்குறைவும், அஜாக்கிரதையான மெத்தனப்போக்கால் நிகழும் இதுபோன்ற துயர சம்பவங்கள் எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Views: - 865

0

0