சாதிவன்முறை பேச்சு… சொந்தக் கட்சியிலேயே கிளம்பிய எதிர்ப்பு ; திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அதிரடி மாற்றம்

Author: Babu Lakshmanan
22 March 2024, 8:46 am
Quick Share

சாதி வன்முறை தூண்டும் விதமாக சூரியமூர்த்தி பேசிய காணொளி வைரலான நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கழகம் கட்சியின் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறையும் கொ.ம.தே.கட்சியே இந்தத் தொகுதியில் போட்டியிட்ட போது, ஏகேபி சின்ராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்றார்.

இந்த முறை தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று அவர் வெளிப்படையாக அறிவித்து விட்டார். இதனால், அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளார்.

ஆனால், சூரிய மூர்த்தியை வேட்பாளராக அறிவித்ததற்கு திமுகவினரே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்குக் காரணம் சூரியமூர்த்தி, ஜாதி ஆணவக் கொலையை ஆதரித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. கட்சியின் நிகழ்ச்சியில் ஒன்றில் அவர் பங்கேற்று பேசியதாவது :- தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் வரக்கூடாது. அப்படி வருமானால் அவர்களை மட்டுமல்லாது, அந்த இளைஞர்களின் தாயையும் சேர்த்து கொன்று விடுவோம் என பேசி இருக்கிறார்.

இந்த நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக சூரிய மூர்த்தி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு பதிலாக மாதேஷ்வரன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Views: - 103

0

0