அதிமுக வேட்பாளரின் கணவரை கடத்திய திமுக வேட்பாளர்..? வேட்புமனுவை வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுவதாகப் புகார்..!!

Author: Babu Lakshmanan
7 February 2022, 11:46 am
Quick Share

விருதுநகர் – ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட 29வது வார்டு அதிமுக பெண் வேட்பாளரின் கணவரை கடத்தியதாக திமுக வேட்பாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து பரிசீலனையும் முடிவடைந்தது. இன்று வேட்புமனு தாக்கலை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். இன்று மாலை இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதனிடையே, அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, 42 வார்டுகளைக் கொண்ட விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதில், 29வது வார்டில் அதிமுக சார்பில் ராதிகாவும், திமுக சார்பில் கீதாவும் போட்டியிட்டுள்ளனர்.

அதிமுக வேட்பாளர் ராதிகாவின் கணவர் ராஜேந்திரனிடம் வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு திமுக தரப்பினர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், அதிமுக தேர்தல் அலுவலகத்திற்கு சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற ராஜேந்திரன் மாயமாகி இருப்பதாகவும், அவரை செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, தனது கணவரை திமுக வேட்பாளர் கீதா தரப்பினர் கடத்தி இருக்கலாம் எனக் கூறி தெற்கு காவல் நிலையத்தில் அதிமுக வேட்பாளர் ராதிகா புகார் அளித்துள்ளார்.ஏற்கனவே, மதுரையில் அதிமுக பெண் வேட்பாளரை கடத்தி மிரட்டியதாகவும், இதைத் தொடர்ந்து, அவர் வேட்புமனுவை வாபஸ் பெற்றதாக வெளியாகியுள்ள தகவல் அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1175

0

0