அதிமுகவில் அராஜகப் போக்கு… தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும் : ஓபிஎஸ் டுவிட்!!

Author: Babu Lakshmanan
22 June 2022, 10:10 am
OPS - Updatenews360
Quick Share

சென்னை : அதிமுகவில் அராஜகப் போக்கு நிலவி வருவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. நாளை அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு நடைபெற உள்ள நிலையில், நாளுக்கு நாள் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவு பெருகி வருகிறது.

தற்போது வரை மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 65க்கும் மேற்பட்டோரின் ஆதரவு அவருக்கு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேவேளையில், ஓபிஎஸ்க்கு இருந்த ஆதரவு 11ல் இருந்து 6ஆக குறைந்துள்ளதாக தெரிகிறது.

இதனிடையே, அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான திரு.கேசவன் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த தருணத்தில், “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்” என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 457

0

1