நடிகர் சரத்பாபுவுக்கு என்னாச்சு…? சமூகவலைதளங்களில் பரவிய தகவல் ; பதறியடித்து விளக்கம் கொடுத்த உறவினர்கள்..!!

Author: Babu Lakshmanan
3 May 2023, 9:17 pm
Quick Share

இயக்குநர், குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் மனோபாலா. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் 700 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், இயக்குநர் பாரதிராஜாவிடம் ஆரம்ப காலதில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

1982ல் ஆகாய கங்கை எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர், ரஜினியின் ஊர்க்காவலன், பிள்ளை நிலா, சிறைபறவை, என் புருஷன்தான் எனக்கு மட்டும் தான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்ளை இயக்கியுள்ளார். சந்திரமுகி, அரண்மனை, துப்பாக்கி, கலகலப்பு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வந்தார். மேலும், சதுரங்க வேட்டை உள்ளிட்ட 3 திரைப்படங்களை தயாரித்துள்ளார். குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் தனது யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களை பேட்டியெடுத்து வந்தார்.

மாரடைப்பு மற்றும் கல்லீரல் பிரச்சனைகள் காரணமாக மனோபாலா இன்று காலமானார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் மனோபாலாவின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடலுக்கு நாளை இறுதிச்சடங்குகள் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், பிரபல மூத்த நடிகர் சரத் பாபு உடல் நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியாகியது.

நடிகர் மனோபாலா மறைவை தொடர்ந்து சரத்பாபுவும் உயிரிழந்து விட்டதாகக் கூறி திரையுலகினர் இரங்கலை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், நடிகர் சரத்பாபு காலமானதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதற்கு உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். சரத்பாபு குறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் தவறானவை என்றும், அதை நம்ப வேண்டாம், விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என விளக்கம் அளித்துள்ளனர்.

Views: - 618

1

1