அதிமுகவுடன் கூட்டணி வைத்ததே இதுக்கு தான்… அண்ணாமலையை பற்றி பேசினால் இனி பொறுத்துக்க மாட்டோம் ; கருப்பு முருகானந்தம் ஆவேசம்!!

Author: Babu Lakshmanan
19 September 2023, 5:12 pm
Quick Share

பாஜகவுடனான கூட்டணியை முறித்த அதிமுகவுக்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் பதிலடி கொடுத்துள்ளார்.

பாஜகவின் மாநில தலைவர் பொறுப்பு ஏற்றது முதல் திமுகவை எதிர்த்து வரும் அண்ணாமலை, அவ்வப்போது கூட்டணி கட்சியான அதிமுகவையும் வெளிப்படையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில், அண்மையில் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இப்படியிருக்கையில், அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அதிமுகவுக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வருகின்றனர். அதேவேளையில், பாஜகவினரும் இதனை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜகவுடனான கூட்டணியை முறித்த அதிமுகவுக்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது :- அ.தி.மு.கவை சார்ந்த திரு.ஜெயக்குமார்,திரு.C.V. சண்முகம் மற்றும் திரு.செல்லூர் கே.ராஜூ போன்றவர்கள் தொடர்ந்து நமது தமிழக பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்களை பொதுவெளியில் அவமரியாதையாக பேசிவருவது வன்மையாக கண்டிக்கதக்கது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் அரசியல் முதிர்ச்சி இன்றி, மூன்றாம் தர மேடை பேச்சாளர்கள் போல அநாகரீகமாக பேசுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

தேர்தல் வெற்றிக்காக பா.ஜ.கவினர் கொண்ட கொள்கையில் ஒரு போதும் சமரசம் செய்திட மாட்டோம். மக்களின் நலனுக்காகவே பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணியே தவிர 2024 பாராளுமன்ற மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அல்ல, வரும் காலங்களிலும் மத்தியில் அ.தி.மு.க கூட்டணி இன்றி பா.ஜ.க தனிபெருபான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்கிற அறியாமையின்றி பேசுகிறார்கள்.

மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களை அ.தி.மு.கவினர் தொடர்ந்து இழிவாக பேசினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம். அவர்களது பாணியில் தக்க பதிலடி கொடுப்போம், என தெரிவித்துள்ளார்.

Views: - 154

0

0