நேற்று சனாதன தர்மம்… இன்று விநாயகர் சதுர்த்தியா..? ஊழல் திமுக அரசின் அடக்குமுறை ; அண்ணாமலை ஆவேசம்..!!!

Author: Babu Lakshmanan
15 September 2023, 4:50 pm
Quick Share

கரூரில் விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்திற்கு சீல் வைத்ததற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வரும் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. வீடு மற்றும் பொது இடங்கள், கோவில்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு, அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இதற்காக, கரூரில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் விநாயகர் சிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த சிலை தயாரிப்பு கூடத்தில் சுமார் 400 விநாயகர் சிலைகள் தயார் நிலையில் இருந்தது. நேற்று திடீரென்று சோதனை மேற்கொண்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் 400 சிலைகளுடன் இருந்த கூடத்திற்கு சீல் வைத்தனர்.

சிலை தயாரிப்பு விதிகளை மீறி பிளாஸ்ட் ஆஃப் ஃபாரிஸ் என்ற கெமிக்கல் கலவை கலந்து சிலை தயாரிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் சிலை தயாரிப்பு கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்ததாக கூறப்படுகிறது. விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒருசில தினங்களே உள்ள நிலையில் விநாயகர் சிலை கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

விநாயகர் சிலை கூடத்திற்கு சீல் வைக்கும் தகவல் அறிந்த சிவசேனா கட்சி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் மற்றும் சிலைகளுக்கு ஆர்டர் கொடுத்தவர்கள் அப்பகுதியில் திரண்டு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, அரசின் விதிகளின்படியே சிலைகளை தயாரித்து வந்ததாகவும், எந்த கெமிக்கலும் கலக்கவில்லை என்று விநாயகர் சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், 10 லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கி சிலை செய்ததாகவும், தற்போது சீல் வைத்ததால், வாழ்வாதாரமே இல்லை என்றும் அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.

இதனிடையே, விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் கரூரில் விநாயகர் சிலை கூடத்திற்கு சீல் வைத்ததற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- பண்டிகை காலங்களை நம்பி பிழைப்பு நடத்துவர்களின் வாழ்வாதாரத்தை திமுக சீர்குலைக்கிறது. சனாதன தர்மத்தை கடைபிடிப்பவர்களின் உணர்வுகளை புண்படுத்துவது மட்டுமல்லாமல், உள்ளூர் பொருளாதாரத்தையும் திமுக தடுத்து நிறுத்துகிறது.

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஊழல் திமுக அரசின் இந்த அடக்குமுறை வன்மையாக கண்டிக்கத்தக்கது, என தெரிவித்தார்.

Views: - 305

0

0