முதல்வருக்கு ஞாபக மறதியா…? இல்ல குற்ற உணர்ச்சியா..? திமுகவின் கபட நாடகத்தை மக்கள் மறக்க மாட்டார்கள் ; அண்ணாமலை பதிலடி

Author: Babu Lakshmanan
16 March 2024, 4:35 pm
Annamalai STalin - Updatenews360
Quick Share

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது :-
கடந்த 1974 ஆம் ஆண்டு, தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது, மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசால், கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. அதன் பிறகு பல முறை, மத்திய அரசில், பசையான அமைச்சர் பதவிகளை மட்டும் வாங்கிக் கொண்டு, கச்சத்தீவு விவகாரத்தில் கள்ள மௌனம் மட்டுமே சாதித்துக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, தேர்தல் காலங்களில் மட்டுமே அதன் ஞாபகம் வருவது விந்தை. கச்சத்தீவு விஷயத்தில் திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி செய்தது துரோகம்.

இலங்கைப் போரின்போது, தமிழகத்தில் ஆளுங்கட்சியாகவும், மத்திய காங்கிரஸ் கட்சியின் கூட்டணியாகவும் இருந்த திமுக நடத்திய மூன்று மணி நேர உண்ணாவிரதம் உள்ளிட்ட கபட நாடகங்களை மக்கள் மறந்து விட்டார்கள் என்று திரு.ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். அதன் பின்னர்தான் நமது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கைது செய்வதும் மிகவும் அதிகரித்தது.

திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, இலங்கை கடற்படையினரால், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது, ஊழல் செய்வதில் மும்முரமாக இருந்த திமுக, தமிழக மீனவர்கள் உயிரைக் காப்பாற்ற எடுத்த நடவடிக்கை வெறும் மௌனமே.

கடந்த 2014 ஆம் ஆண்டு, இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட போது, திமுக அன்றும் மௌனமாகத்தான் இருந்தது. அவர்களை பத்திரமாக மீட்டது நமது பாரதப் பிரதமர் மோடி அரசு.

மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் பிரதமர் பொறுப்பேற்ற பிறகு, இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள், உடனுக்குடன் மீட்கப்படுகிறார்கள். அவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் நேராமல், சட்டப்பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த பாரத நாடும், நமது மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது.

கச்சத்தீவை விட்டுக் கொடுத்து, தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டு, ஐம்பது ஆண்டுகள் மௌனமாக இருந்து கொண்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு குறித்துப் பேசும் திரு. ஸ்டாலின் அவர்கள், சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது, எனக் கூறியுள்ளார்.

Views: - 185

0

0