ED, IT அதிகாரிகளை ‘நாய்’ என விமர்சித்த காங்கிரஸ் எம்எல்ஏ… சட்டசபையில் பரபரப்பு ; பதிலடி கொடுத்த அண்ணாமலை..!!

Author: Babu Lakshmanan
18 November 2023, 2:20 pm
Quick Share

அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தும் அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக அரசு ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்என் ரவி அண்மையில் மீண்டும் திருப்பி அனுப்பினார். இந்த மசோதாக்களை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு மறுபடியும் அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று கூடியது. முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்த இந்த தனித்தீர்மானத்தின் மீது அனைத்து எம்எல்ஏக்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.

அந்த வகையில், காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப்பெருந்தகை உரை நிகழ்த்தினார். அதாவது, சமூக நீதியை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும், ராஜ் பவனை ஆர்.எஸ்.எஸ். கூடாரமாக மாற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அண்ணா பல்கலைக்கழகம் அவருடைய கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அங்கு பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதைப் பற்றி ஆளுநர் பேசுவாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, அமைச்சர்களின் வீடுகளில் ஏதோ நாய் நுழைவது போல எல்லாரும் நுழைந்து வருவதாக, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளை மறைமுகமாக விமர்சித்தார். அவரது இந்தப் பேச்சை ஏற்க மறுத்த சபாநாயகர் அப்பாவு, அந்த வார்த்தையை நீக்கி விடுவோம் என்று கூறினார்.

சட்டசபையில் ஆளும் கட்சியின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியின் எம்எல்ஏ ஒருவர், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளை அவமதித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, செல்வப்பெருந்தகையின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஊழல்களை அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் அம்பலப்படுத்தி வருவதால் ஏற்பட்டுள்ள பயத்தின் வெளிப்பாடு தான் இந்தப் பேச்சு என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

Views: - 214

0

0