நடிகர் வடிவேலு இல்லாத குறையை தீர்க்கும் திமுக அமைச்சர்கள்.. வெட்கம், மானம் இல்லாத கட்சி காங்கிரஸ்… அண்ணாமலை கடும் விமர்சனம்…!!

Author: Babu Lakshmanan
8 June 2022, 11:50 am
Quick Share

தப்பித் தவறிகூட ஆதீனத்தை தொட்டு விடாதீர்கள் என்றும், அப்படி செய்தால் விளைவு மிக பயங்கரமாக இருக்கும் என்று தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் 8 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.

அவர் பேசியதாவது :- அமைப்பு சார தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் 62 லட்சம் தொழிலாளர்களுக்கு 2 லட்சம் உதவித்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏழை மக்கள் உயரவேண்டும். அவர்களும் முதலாளிகளாக ஆகவேண்டும் என்பதற்காக பல நல்ல திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

ஜிஎஸ்டியில் எவ்வளவு நிதி தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கே தெரியவில்லை. பிரதமர் சென்னைக்கு வந்த போது வாய்க்கு வந்ததெல்லாம் முதல்வர் உளறி வந்தார். எங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டியை தாருங்கள் என்று. ஜிஎஸ்டியின் வாயிலாக 9,602 கோடியை நாங்கள் கொடுத்து விட்டோம் என்று பிரதமரே மேடையில் கூறி விட்டார். இந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவர் எந்தத் துறை அமைச்சர் என்று அவருக்கே தெரியவில்லை.

அவரது நண்பர் உதயநிதி ஸ்டாலின் சூட்டிங் நிகழ்ச்சி நடக்கும்போது லைட்டு பாயாக அமைச்சர் சென்று அமர்ந்திருப்பார். பின்னர் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குவார். எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு மாணவர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்த்து கற்றுக் கொள்வார்கள். ஆனால், எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள்.

புது காஸ்டியூம் போட்டுள்ளார் அமைச்சர் சேகர் பாபு. மீண்டும் காவி வேட்டி கட்ட துவங்கியுள்ளார். மதுரை ஆதீனத்தை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு மிரட்டி வருகிறார். பழைய சேகர்பாபுவை பார்ப்பதற்குத்தான் மோடி அரசு காத்துக் கொண்டு இருக்கிறது. ஆதீனத்தின் மேல் மட்டும் நீங்கள் கையை வைத்து பாருங்கள். ஆதீனத்தை மிரட்டும் வேலையை நிறுத்தி விடுங்கள்.

மதுரையில் துறவிகள் மாநாடு நடந்து முடிந்து இருக்கிறது. ஆதீனத்தை நேரில் வர சொல்லி முதல்வரை சந்திக்க வைக்கின்றனர். ஆதீனத்தை மிரட்ட ஆரம்பித்து விட்டனர். இவர்களுடைய அழிவுக்கு அது தான் காரணமாக இருக்கும்.

வடபழனி முருகன் கோவிலில் 5.5 ஏக்கர் மீட்கப்பட்டதாக கூறுகின்றனர். இதே 2007ல் இந்த இடத்தை குத்தகைக்கு விட்டவர்களே நீங்கள்தான். தப்பித் தவறிகூட ஆதீனத்தை தொட்டு விடாதீர்கள். விளைவு மிக பயங்கரமாக இருக்கும்

நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் மருத்துவ சீட் 66 ஆயிரம் சீட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. வெறும் எட்டு ஆண்டுகளில் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவர்களாக உருவாக வேண்டும் என்பதே நமது இலக்கு. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள் மற்றும் நிர்வாகிகள் 10 தனியார் மருத்துவ கல்லூரிகளை நடத்தி வருகின்றனர். 2006 முதல் 2011 வரை ஜிடுசியல் என்குயரி போட்டால் இன்று கோபாலபுரத்தில் உள்ள பாதிப்பேர் சிறைக்கு செல்ல வேண்டும்.

ஹிந்தி கண்டிப்பாக திணிக்கப்படாது. எனக்கு ஹிந்தி தெரியாது. டெல்லி வந்து தான் ஹிந்தியை கற்றுக்கொண்டேன் என்று பிரதமர் கூறியுள்ளார். பொன்முடி ஆப்ட்சனாக ஹிந்தி உள்ளது என கூறுகிறார். புதிய கல்விக் கொள்கையில் என்ன உள்ளதோ, அதை அப்படியே கையில் எடுத்துக் கொண்டு, தமிழகத்தின் கல்வி கொள்கை என்று கூறுவதற்கு தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் வெட்கப்பட வேண்டும்.

மத்திய அரசின் எந்த கூட்டத்திற்கும் இங்குள்ள அமைச்சர்கள், முதலமைச்சர்கள் செல்வதில்லை. குஜராத்தில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக கூட்டம் ஒன்று நடந்தது. நமது கல்வி அமைச்சருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆறு மாதத்திற்கு முன்னர் கல்வி துறை செயலாளர்களுக்கு கூட்டம் நடத்திய போது அழைப்பு கொடுக்கப்பட்டது. அப்போது அமைச்சர்களுக்கு ஏன் அழைப்பு கொடுக்கவில்லை என்று கூறி செயலாறை அனுப்பவில்லை.

இங்கு உள்ள அமைச்சர்கள் அனைவருமே தொடை நடுங்கிகள். தமிழகத்தை தாண்டி எங்குமே செல்ல மாட்டார்கள். வடிவேல் நடிக்கவில்லை என்பதை திமுக அமைச்சர்கள் சேர்ந்தவர்கள் பூர்த்தி செய்து வருகிறார்கள். பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் போட்டிபோட்டு பேட்டி கொடுத்து வருகின்றனர். நியூட்ரீசன் திட்டத்தில் கமிஷன் நடைபெற்றுள்ளது. அதை ஆதாரத்தோடு நாங்கள் நிரூபிக்க உள்ளோம்.

அனைத்து இடத்திலும் ஊழல் செய்யும் ஒரு கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்துள்ளது. எல்லா துறைகளிலும் தனது குடும்பத்தை சார்ந்தவர்கள் இருக்க வேண்டுமென்று திட்டமிட்டது. 1974 கலைஞர் இரண்டு தவறுகளை செய்கிறார். 356 பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, ஹேமாவதியில் ஐந்து அனை கட்ட காரணமாக இருந்தார். கட்சத் தீவை தூக்கி கொடுத்தார்.

மேகதாதுவை பற்றி பேசுவதற்கு நம் முதலமைச்சருக்கு எந்தவித முகாந்திரமும் கிடையாது. வெட்கமும், மானமும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி தான். ஓரமாக இருந்து வேடிக்கை பார்த்தாலே போதும் கச்சத்தீவை பா.ஜ.க. மீட்கும். 18 கோடி தொண்டன் பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார்கள். உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக கட்சி நாங்கள்.

அறத்தின் வழியில் செல்ல வேண்டும் என்று நினைக்கிறோம். சில்லு வண்டுகளை எல்லாம் நீங்கள் தொண்டன் என்று அழைத்து வராதீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஊழல்களையும் மக்கள் மன்றத்தில் நாங்கள் தொடர்ந்து வைக்கப் போகிறோம். 2024ல் கண்டிப்பாக பாரதிய கட்சியின் எம்பி தான் திருச்சியில் இருப்பார். காவல்துறை கையில் கட்டப்பட்டுள்ள கட்டை அவிழ்த்து அவர்கள் கம்பீரமாக வர வழிவகை செய்வோம்.

2024ல் நான் டெல்லியில் வெற்றிபெற போகிறோமா என்பது கேள்வி கிடையாது. 400 சீட்டு வாங்கப் போகிறோமா அல்லது 450 வாங்கப் போகிறோமா என்பது கேள்வி. 25 இடம் தமிழகத்தில் பா.ஜ.க வெற்றி பெற வேண்டும். குறிப்பாக 5 எம்பிக்கள் தமிழகத்திலிருந்து கேபினெண்ட்டுக்கு செல்லவேண்டும், என கூறினார்.

Views: - 882

0

0