டாஸ்மாக் மூலம் பெண்களின் தாலியை அறுப்பது பாவமில்லையா..? கணக்கு போட்டால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தான் ஆபத்து ; வானதி சீனிவாசன் பதிலடி..!!

Author: Babu Lakshmanan
29 July 2023, 6:16 pm
Quick Share

பாவங்களை கணக்கு போட்டால் அந்தப் பாவ கணக்கில் முதல்வர்தான் முதலில் மூழ்குவார் என்றும், பாஜகவின் பாதயாத்திரையை பாவ யாத்திரை என்று முதல்வர் கூறியதற்கு மதுரை விமான நிலையத்தில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் நேற்று நடைபெற்ற பாஜக யாத்திரையில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

அண்ணாமலையின் யாத்திரை குறித்த கேள்விக்கு: இந்த யாத்திரை தமிழகத்தில் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலுக்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படும். புதிதாக அவர்களை சேர்ப்பதற்கும் கட்சியின் வளர்ச்சிக்கும் இது பிரயோஜனமாக இருக்கும், எனக் கூறினார்.

தொடர்ந்து, பாஜகவின் யாத்திரை பாவ யாத்திரை என்று முதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு:- திமுக ஒவ்வொரு நாளும் தமிழகத்திற்கு செய்து கொள்ளும் பாவத்தை பார்க்கும் போது, அவர் அந்த வார்த்தையை கூட பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு நாளும் இந்த மாநில அரசு டாஸ்மாக் மூலமாக எத்தனை பெண்களின் தாலியை பறிக்கிறார்கள் என்று பார்த்தால் அந்த பாவத்தை கணக்கு போட்டால் அந்தப் பாவ கணக்கில் முதல்வர்தான் முதலில் மூழ்குவார்.

நெய்வேலி பிரச்சனை தொடர்பான கேள்விக்கு:நெய்வேலி பிரச்சனை தொடர்பாக நிதியமைச்சர் விளக்கம் கொடுத்திருக்கிறார். விவசாயிகளின் பேச்சு வார்த்தை மற்றும் பயிர் விளையும் போது நிலத்தை எடுப்பதை தவிர்த்து இருக்கலாம் அதிகாரிகள் இதை திட்டமிட்டு விவசாயிகளை சமாதானம் செய்திருக்க வேண்டிய விஷயம் இது. பச்சை வயதில் இயந்திரத்தைக் கொண்டு அளிக்கும்போது யாராக இருந்தாலும் மனதை பாதிக்கத்தான் செய்யும். தகுந்த நடவடிக்கைகள் எடுக்கிறதோ அல்லது தேவைப்படக்கூடிய உறுதிமொழிகளை கொடுப்பது நஷ்ட ஈடு கொடுப்பது போன்றவை செய்யாமல் இந்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை என்று தான் தோன்றுகிறது.

பாமக ஆர்ப்பாட்டம் குறித்த கேள்விக்கு: ஒவ்வொரு போராட்டமும் ஒரு குறிக்கோளுக்காக நடைபெறும் ஒவ்வொரு கட்சி ஒவ்வொரு விதமாக நடத்துவார்கள், என்றார்.

Views: - 212

0

0