காவிரி விவகாரத்தில் தோல்வி… முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா செய்வாரா..? முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
29 September 2023, 11:52 am
Quick Share

காவேரி உரிமையை சரியாக கையாளாதால் இரு மாநில உறவுகள் கேள்விக்குறியாக உள்ளதாகவும், இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன் வருவாரா?  என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்  ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :- தேர்தல் வாக்குறுதி கொடுக்கும் பொழுது, சொன்னதை செய்வோம், சொல்லாதை செய்வோம் என்று கருணாநிதி சொன்னதை கடைப்பிடிப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் கூறினார். இதை நம்பி வாக்களித்த மக்கள் பரிதாபமாக உள்ளனர். மின்சார கட்டணம் மாதத்துக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படும் என்று கூறினார்கள்.

அது குறித்து, பலமுறை சட்டமன்றத்தில் கேள்வி கேட்டும் பலன் இல்லை. மேலும், சொல்லாத திட்டங்களையும் செய்துள்ளார். மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு இப்படி செய்து மக்களை துன்பக் கடலில் ஆழ்த்தியுள்ளார். 110 விதியின் கீழ் அம்மா பல்வேறு  திட்டங்களை கொடுத்தார்கள். அதேபோல், எடப்பாடியாரும் 110 விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை செய்தார்.

அப்போது குறைகூறிய ஸ்டாலின், தற்போது முதலமைச்சராக வந்தபோது110 விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இந்த திட்டம் நிலைமை என்ன?  520 தேர்தல் வாக்குறுதி கொடுத்து 100 சதவீதம் நிறைவேற்றியதாக பச்சை பொய் கூறினார். அதேபோல், மானிய கோரிக்கைகள் பல்வேறு அறிக்கை, வேளாண் பட்ஜெட்டில் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் ஆகியவற்றை காற்றில் பறக்க விட்டு விட்டு, நிறைவேற்றியதாக பச்சை பொய் கூறும் முதலமைச்சர் நாட்டுக்கு தேவையா? இதற்கு தீர்வு வேண்டும். 

பொய் பேசும் கடமையாற்றும் முதல்வரை இந்த நாடு பெற்றுள்ளது. எல்லாம் செய்து விட்டோம் என்று மக்களை ஏமாற்றும், மக்களை வஞ்சிக்கும் இந்த முதலமைச்சர் தேவையா? அவருக்கு தக்கப்பாடம் புகட்ட வேண்டும். இல்லையென்றால் நாடு குட்டிசுவராக்கிவிடும். ஒரு கோடி இளைஞருக்கு வேலை இல்லை, 2 கோடி 20 லட்சம் குடும்ப மக்களை பற்றி சிந்திக்கவில்லை.

விவசாயிகள் பற்றி சிந்திக்கவில்லை, நான் டெல்டாகாரன் என்று கூறுகிறார். ஆனால் இன்றைக்கு கர்நாடகா, தமிழ்நாடு மாநில உறவுகள் படும் மோசமாக உள்ளது. இதை கையாலாக தெரியாமல் முதலமைச்சர் தொடர்ந்து மௌனமாக இருப்பது மர்மம் என்ன? இந்த  விவரங்களை தமிழ்நாடு மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டாமா?

இது குடும்ப பிரச்சினை இல்லை. நாட்டு பிரச்சினை, விவசாயிகள் பிரச்சனை, நம்முடைய தமிழ்நாடு உரிமை பிரச்சினை, உங்களை நம்பி விவசாய மக்கள் விதை விதைத்தார்கள். குறுவை சாகுபடி போய்விட்டது. சம்பா சாகுபடியும் இனி கை கொடுக்குமா..? என தெரியவில்லை. காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு, ஆணைய தீர்ப்பு, ஒழுங்காற்று தீர்ப்பு இதை உங்களால் செயல்படுத்த முடியவில்லை. நீங்கள் முதலமைச்சர் பதவி இருந்து கொண்டு மக்களை வஞ்சிப்பது  நியாயம் தானா?

கர்நாடக மாநிலத்தில் எந்த வாகனமும் செல்ல முடியவில்லை, இதான் நிலைமை. அதிமுக ஆட்சியில் இது போன்று ஏற்படவில்லை. புரட்சி தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் இதை முறையாக கையாண்டார்கள், முக்கியத்துவம் கொடுத்தார்கள், அதற்காக நேரத்தை செலவிட்டார்கள், முழுஅக்கறை உள்ள முதலமைச்சராக புரட்சித்தலைவி அம்மாவும், எடப்பாடியாரும் திகழ்ந்தார்கள்.

ஆனால் முதலமைச்சருக்கு நேரம் ஒதுக்க நேரமில்லை, எந்த விளக்கமும் கொடுக்கவில்லை, இந்தியா கூட்டணி பற்றி பேசினீர்கள்? தமிழக ஜீவாதார காவேரி உரிமையை கையாளாதால் இரு மாநில உறவுகள் கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய முன் வருவீர்களா, காவிரி உரிமை பெற்று தர முடியாத முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறினார்.

Views: - 276

0

0