மரம் விழுந்து பலியான பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Author: Babu Lakshmanan2 November 2021, 12:35 pm
சென்னை : தலைமைச் செயலகத்தில் பெரிய மரம் மழையினால் வேரோடு சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இன்று காலை சுமார் 9.00 மணியளவில் தலைமைச் செயலக முதலமைச்சர் தனிப்பிரிவு கட்டிடத்தின் அருகில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மரம் மழையின் காரணமாக வேரோடு சாய்ந்து விழுந்தது. அப்போது, அங்கே காவல் பணியிலிருந்த முத்தயால்பேட்டை போக்குவரத்து காவல்நிலைய தலைமைக் காவலர் கவிதா அவர்கள் மரத்தினடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த மன வருத்தமடைந்தேன். பணியிலிருக்கும்போது உயிரிழந்த தலைமைக் காவலர் திருமதி.கவிதா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேற்கண்ட சம்பவத்தில் உயிரிழந்த திருமதி.கவிதா அவர்களின், குடும்பத்தாருக்கு உடனடியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 10 இலட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன், என தெரிவித்துள்ளார்.
0
0