இது உணர்வுப்பூர்வமான விஷயம்.. மீனவர்களின் குடும்பத்தையும் கொஞ்சம் நினைத்து பாருங்க ; மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!!

Author: Babu Lakshmanan
11 March 2024, 8:55 pm
Quick Share

உணர்வுப்பூர்வமான பிரச்சினையின் தன்மையைக் கருத்தில்கொண்டு இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11-3-2024) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் இலங்கைக் கடற்படையினர் (10.03.2024) அன்று. இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மூன்று மீன்பிடி விசைப்படகுகளை சிறைபிடித்துள்ளதோடு, 22 மீனவர்களை கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டு, இது நமது நாட்டு மீனவர்களின் நலனை பாதிக்கும் பெரும் கவலைக்குரிய சம்பவம் என்பதால், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இதில் உடனடியாக தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

நமது மீனவர்கள் பல தலைமுறைகளாக நமது நாட்டிற்கு அருகே உள்ள கடற்பரப்பில் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகின்றனர் என்றும் மீன்பிடித் தொழில்தான் அவர்களது வாழ்வாதாரமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபகாலமாக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்படுவதும் கைது செய்யப்படுவதும் அவர்களது மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் அதிகரித்து வருவதாகக் கவலையோடு குறிப்பிட்டுள்ளார். இத்தகைய கைது நடவடிக்கைகள், பாதிக்கப்படும் மீனவர்களுக்கும். அவர்களது குடும்பத்தினருக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பெருமளவில் பாதிப்பதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, உணர்வுப்பூர்வமான இந்தப் பிரச்சினையின் தன்மையைக் கருத்தில்கொண்டு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட விரைவாகவும், தீர்க்கமாகவும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 93

0

0