மிக்ஜாம் புயலால் நிலைகுலைந்து போன சென்னை… ரூ.5,060 கோடி இடைக்கால நிவாரணம் வழங்குக ; பிரதமருக்கு CM ஸ்டாலின் கடிதம்..!!

Author: Babu Lakshmanan
6 December 2023, 9:48 am
Quick Share

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.5,060 கோடியை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில்‌ கடந்த 2, 3 மற்றும்‌ 4 ஆகிய தேதிகளில்‌ தாக்கிய “மிக்ஜாம்‌” புயல்‌ காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின்‌ காரணமாக, சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌ மற்றும்‌ செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில்‌ மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது. இதன்‌ காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில்‌, குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ மிகக்கடுமையான பாதிப்புகள்‌ ஏற்பட்டுள்ளன.

சாலைகள்‌, பாலங்கள்‌, பொது கட்டடங்கள்‌ என பல்வேறு உட்கட்டமைப்புகள்‌ சேதம்‌ அடைந்துள்ளன. மேலும்‌, இலட்சக்கணக்கான மக்களின்‌ வாழ்வாதாரம்‌ இதனால்‌ பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம்‌ விளக்கமாகக்‌ குறிப்பிட்டு, தமிழ்நாட்டிற்கு, இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின்‌ கீழ்‌ ரூ. 5,060 கோடியினை
உடனடியாக வழங்கிடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ மாண்புமிகு இந்தியப்‌ பிரதமர்‌ நரேந்திரமோடி அவர்களைக்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.

மேலும்‌, “மிக்ஜாம்‌’ புயலால்‌ பெய்த கனமழையின்‌ காரணமாக ஏற்பட்ட சேதங்களைக்‌ கணக்கிடும்‌ பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது என்றும்‌, முழுவிவரங்கள்‌ சேகரிக்கப்பட்ட பின்னர்‌, விரிவான சேத அறிக்கை தயார்‌ செய்யப்பட்டு, கூடுதல்‌ நிதி கோரப்படும்‌ என்றும்‌ தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌, சேதமடைந்த பகுதிகளைப்‌ பார்வையிட ஒன்றிய அரசின்‌ குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறும்‌ தனது கடிதத்தில்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.

முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய இந்தக் கடிதத்தை திமுக எம்பி டிஆர் பாலு பிரதமர் மோடியிடம் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 189

0

0