அரசியல் சில்லறை தனம் வேண்டாம்… அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்எல்ஏ பதிலடி ; போலீஸிலும் புகார்..!!

Author: Babu Lakshmanan
18 August 2023, 4:45 pm
Quick Share

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது இரணியல் காவல்நிலையத்தில் எம்எல்ஏ பிரின்ஸ் புகார் அளித்துள்ளார்.

‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக குளச்சலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, குளச்சல் தொகுதி எம்எல்ஏவான பிரின்ஸ், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தருடன் இணைந்து காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார். அவர் பேசிய இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து, தன் மீதான அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் பதிலடி கொடுத்தார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “நான் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் முறைகேடுச் செய்திருப்பதாக் கூறியிருக்கிறீர்கள். உங்களுக்கு திராணியிருந்தால் நீங்கள் கூறிய குற்றச்சாட்டை நீரூபிக்க முடியுமா? இல்லையேல், மேலும் அரசியல் சில்லறைத் தனம் செய்யாமல் பதவி விலக தயாரா?,” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது இரணியல் காவல்நிலையத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் புகார் அளித்துள்ளார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக துணைவேந்தரை கைவசப்படுத்தி பல அரசு பணிகளின் மூலம் முறைகேடாக பணம் சம்பாரித்ததாக அண்ணாமலை கூறியிருப்பதாகவும், உண்மைக்கு புறம்பான இந்தக் குற்றச்சாட்டுகளால், பொதுவாழ்க்கையில் இருக்கும் தனக்கு மிகுந்த மனவேதனையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, தனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அந்தப் புகார் மனுவில் கூறியுள்ளார்.

நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 330

0

0