சர்ச்சை பேச்சுக்கு முற்றுப்புள்ளி… பின்வாங்கிய திமுக எம்பி தயாநிதி மாறன்… வருத்தம் தெரிவித்து ட்வீட்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 January 2024, 3:58 pm
Dayanidhi
Quick Share

சர்ச்சை பேச்சுக்கு முற்றுப்புள்ளி… பின்வாங்கிய திமுக எம்பி தயாநிதி மாறன்… வருத்தம் தெரிவித்து ட்வீட்!!

தயாநிதி மாறன் 2019-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசுகையில், இந்தி மொழியை கற்பதால் எந்த பயனும் இல்லை என்பதை விளக்கும் வகையில் தமிழ்நாட்டில் கட்டிடம் கட்டுபவர்கள் எல்லாம் யார்? உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் இந்தி மட்டுமே படித்தவர்கள்தான். தமிழ்நாட்டில் தமிழைக் கற்றுக் கொண்டு தற்போது வீடு கட்டுகிறார்கள், சாலை போடுகிறார்கள், கழிப்பறை கழுவுகின்றனர் என கூறியிருந்தார்.

இந்த வீடியோவை திடீரென அண்மையில் பாஜகவினர் சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரப்பிவிட்டனர். தயாநிதி மாறன் தற்போதுதான் இப்படி பேசுவதாக ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. இதனால் வட இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் தயாநிதி மாறன் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் கண்டனம் தெரிவித்திருந்தார். ஏற்கனவே சனாதன ஒழிப்பு தொடர்பான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை இதேபோல பாஜகவினர் திரித்துவிட்டதால் பிரதமர் மோடி முதல் மத்திய அமைச்சர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அது இந்தியா கூட்டணியிலும் பிரச்சனையை கிளப்பி இருந்தது.

இந்த நிலையில் தமது பழைய வீடியோ பகிர்வு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தயாநிதி மாறன் பதிலடி கொடுத்தார். ஆனால் அந்த பதிலடியும் பெரும் சர்ச்சையாகிப் போனது. அதாவது, , “வேலையில்லா முடி திருத்துநர் பூனையைப் பிடித்து சிரைப்பாராம். அதே போலதான், இவர்கள் ஏதாவது ஒரு கலகத்தை உருவாக்க வேண்டும். அதிலும் குறிப்பாக பாஜகவைச் சேர்ந்த ஐ.டி. விங், அதிலும் தேசிய அளவில் இந்த ஐ.டி விங்கை சேர்ந்தவர்கள் ஏதாவது ஒரு பிரச்னையை உருவாக்கி, அதைப் பெரிதாக்கி, பூதாகரமாக்கி அதில் பலன் பெறலாம் என்று நினைக்கிறார்கள். அது எடுபடாது” என கூறியிருந்தார் தயாநிதி மாறன்.

இந்த விவகாரத்தை முன்வைத்து முடி திருத்தும் சமூகத்தை அவமரியாதை செய்துவிட்டார் தயாநிதி மாறன் என நாடு முழுவதும் கொண்டு போய் சேர்த்து அடுத்த பஞ்சாயத்தை கூட்டியது. தற்போது இந்த விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் தயாநிதி மாறன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் தயாநிதி மாறன் பதிவிட்டுள்ளதாவது: கடந்த ஒன்பது ஆண்டுகால ஒன்றிய பாஜக அரசின் மக்களுக்கான சாதனைகள் என்று சொல்லுவதைக்காட்டிலும் வேதனைகளே அதிக அளவில் உள்ள காரணத்தினால், நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான பாஜக அரசு பெருத்த சரிவை சந்திக்கக் கூடிய சூழல் உருவாகி இருக்கின்றது.

எனவே பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியானது தீவிரமாக இறங்கியுள்ளது, அதுவும் குறிப்பாக எதிர்க்கட்சியினர் பேசுகின்ற பேச்சை வெட்டியும், ஒட்டியும், திரித்தும், மறைத்தும் அவைகளை வெளியிட்டும், சமூக வலைதளங்களில் பரப்பியும் புளகாங்கிதம் அடைந்து வருகின்றது, அது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது, நான் அளித்த பதில் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

எந்த ஒரு காலத்திலும் தனிப்பட்ட நபரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ காயப்படுத்தும் எண்ணம் எப்போதும் எனக்கு இருந்ததில்லை என்பதை இந்த நேரத்தில் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் எனது கருத்துக்கள் யாரையாவது புண்படுத்தும் வகையில் அமைந்திருந்தால், அதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தயாநிதி மாறன் பதிவிட்டுள்ளார்.

Views: - 327

0

0