கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த விவசாயிகளுக்கு ரூ. 4,000 ரொக்கம் : மாநில அரசு அறிவிப்பு!
23 September 2020, 12:42 pmகொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.4,000 ரொக்கம் செலுத்தப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு இன்னும் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. இந்த தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், பாமர மக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக மத்திய பிரதேச அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், வட்டியில்லா விவசாயக் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.800 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அதில், வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.4,000 ரொக்கம் செலுத்தப்படும் என மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இது பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்த ரொக்கம் நடப்பு நிதியாண்டில் 2 தவணைகளில் கிடைக்க வழிவகை செய்யப்படும். விவசாயிகளின் நலன் தான் என்னுடைய வாழ்வின் இலக்கு. வரும் 2022ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.