ரெண்டு தொகுதி போதாது… திமுகவுடன் கூடுதல் தொகுதிகளை கேட்க CPM முடிவு ; கே.பாலகிருஷ்ணன் திட்டவட்டம்…!!

Author: Babu Lakshmanan
1 December 2023, 2:45 pm
Quick Share

கோவை : எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- 5 மாநில தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தெலுங்கானாவிலும், சத்தீஸ்கரிலும் வெற்றி பெறும் எனவும், ராஜஸ்தானில் பா.ஜ.க வெற்றி பெறும் எனவும் கணிப்பு முடிவுகள், பகிர்ந்து இருக்கும் படியாக இருக்கின்றது. கடந்தாண்டு 40,000 கார்பரேட்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வேலையிழப்பு அதிகளவில் உள்ளது. வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. பணவீக்கம் அதிகமாக உள்ளது. 58% இந்தியர்கள் சொந்தமாக பணி செய்பவர்களாக உள்ளனர். வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த பிரச்சினை பிரதிபலிக்கும். பெண்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர் தாக்கப்படுகின்றனர். வெறுப்பு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாநில அதிகாரத்தை பறிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது.

ஜி 20 மாநாடு இந்தியா தலைமை வகிப்பதாகவும், முன்னிலை வகிப்பதாக பிம்பம் உருவாக்கப்பட்டது. ஆனால் ஜி 20யில் உள்ள நாடுகளில் கடைசி இடத்தில் தான் இந்தியா உள்ளது. யுனஸ்கோவில் அமெரிக்காவின் குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். மிகவும் தீவிரமான பிரச்னை இந்தியாவில் நிலவி வருகிறது. இந்திய மக்களுக்காக, இந்தியாவிற்காக பாஜக வீழ்த்தப்பட வேண்டும்.

5 மாநில தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்தில் கூட்டணி பணிகள், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கப்படும். எல்லா கருத்து கணிப்பு முடிவுகளும் பா.ஜ.கவிற்கு சாதகமாக இல்லை. சில மாநிலங்கள் சாதகமாக இருக்கின்றது. சில மாநலங்களில் சாதகமற்ற நிலை இருக்கின்றது. இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும். தமிழகத்தில் திமுக கூட்டணியில் சிபிஎம் இருக்கிறது. அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை.

இந்தியா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்ற பின், பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம். ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப சிபிஎம் கூட்டணிகளை முடிவு செய்துள்ளது. அது இந்தியா கூட்டணியின் வெற்றியை பாதிக்காது. அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவற்றை வைத்து மத்திய அரசு மிரட்டுகிறது. அமலாக்கத்துறை பதிவு செய்யும் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில்லை. அவ்வழக்குகளில் வெறும் ஒரு சதவீத வழக்குகளில் தான் தீர்ப்பு வந்துள்ளது. 8 மசோதாக்களை 3 ஆண்டுகளாக கேரளா கவர்னர் நிறுத்தி வைத்திருக்கின்றார். கவர்னர்களை வைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு இந்திய அரசு நடத்த வேண்டும், எனக் கூறினார்.

இதையடுத்து பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “பாஜக, அதிமுக கட்சிகளை வீழ்த்துவதற்காக திமுக கூட்டணியில் உள்ளோம். அதிமுக பா.ஜ.கவின் பி டீமாக செயல்படுகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் கடந்த அளவு கிடைத்த அளவு வெற்றி கூட இந்த முறை அதிமுகவால் பெற முடியாது. சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பது போல எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

முத்தலாக், சிஏஏ, காஷ்மீர் பிரிவினை போன்றவை கொண்டு வரப்பட்ட போது, எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத கட்சி அதிமுக. இப்போது சிறுபான்மை மக்களின் காவலன் என ஏமாற்ற பார்க்கின்றது. அதனை எடப்பாடி பழனிசாமி வேண்டுமென்றால் மறந்திருக்கலாம். சிறுபான்மை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். பா.ஜ.க, அதிமுக எவ்வளவு பிரச்சாரம் செய்தாலும் எடுபடாது.

கோவை, மதுரை ஆகிய இரு தொகுதிகளில் கடந்து முறை போட்டியிட்டு வெற்றி பெற்றோம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த இரு தொகுதிகளையும் வலியுறுத்தி கேட்டு பெறுவோம். எல்லா கட்சிகளையும் போல கூடுதலான தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளது. கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கூடுதல் தொகுதிகளில் கேட்போம். தொகுதி பங்கீட்டில் பிரச்சனை ஏற்படும் என நினைக்கின்றனர். ஆனால் தொகுதி உடன்பாடு சுமூகமாக நடைபெறும்.

உண்மைக்கு மாறான விடயங்களை மோடி துவங்கி அண்ணாமலை பேசுகின்றனர். அண்ணாமலை மூளைக்கு எதுவும் தெரியாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் காவிரி டெல்டா பகுதி என்பது பற்றி ஞானமே இல்லை. அண்ணாமலை ஞானசூனியமாக இருக்கின்றார். தமிழக வளர்ச்சிக்கு யார் அதிகம் இருந்திருக்கின்றனர், கம்யூனிஸ்டுகளா..?, பா.ஜ.கவா..? என பகிரங்கமாக விவாதிக்க தயார்.

தமிழக அரசு மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். தமிழகத்தில் உள்ள தொழில்கள் வேறு பல மாநிலங்களுக்கு இடம் மாறும் நிலை இருக்கிறது. சிறுகுறு தொழில் முனைவோரிடம் பேச்சு நடத்தி தொழில் கடன்கள் வழங்கி அவர்கள் தொழில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் மீது குண்டர் சட்டம் போடக்கூடாது என்பதை உடனே வலியுறுத்தினோம்.

அருண் என்கிற விவசாய போராட்டத்தை ஒருங்கிணைந்த நபர் மீது போடப்பட்ட வழக்கையும் வாபஸ் பெற வேண்டும். திமுக கொடுத்து இருக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். போக்குவரத்து ஊழியர் சம்பள விவகாரம், பழைய ஓய்வூதியம் போன்றவை நிறைவேற்றப்பட வேண்டும். மதுரை, கோவை நாடாளுமன்ற தொகுதிகளை கண்டிப்பாக கேட்போம். தொழில் துறையினருக்கு மின்கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம், எனத் தெரிவித்தார்.

Views: - 213

0

0