ஈரோடு இடைத்தேர்தல்… கடைசி நேரத்தில் தில்லுமுல்லு செய்யும் பாஜக.. இது நல்லதல்ல.. மக்கள் ஏற்கமாட்டார்கள் : கே.பாலகிருஷ்ணன் அலறல்!!

Author: Babu Lakshmanan
17 February 2023, 10:25 am
Quick Share

அதானியின் வியாபார ஏஜென்ட் போலதான் மோடி ஆட்சி நடந்து வருகிறது எனவும், மேலும் ஈரோடு கிழக்குத் தேர்தலில் அதிமுக-பாஜக படுதோல்வி அடையும் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் நேற்று மாலை தேசபந்து மைதானத்தில் நடைபெறும் கோரிக்கை மாநாட்டில் கலந்து கொள்ள வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசியதாவது :- விருதுநகரில் மலை மக்களின் வாழ்வதார கோரிக்கை மாநாடு என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் விவசாயத்துறையில் சிறு குறு தொழில்நுட்பங்களை பாதுகாப்பதில் என்ன என்ன மாற்று கொள்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஒரு ஆய்வு அறிக்கையை இந்த மாநாட்டில் வெளியிட இருக்கிறோம்.

மேலும், விருதுநகர் மாவட்டத்தில் காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம், விருதுநகர் இராமநாதபுரம் சிவகங்கை போன்ற மாவட்டங்கள் வளமான பகுதிகளாக மாறும்.

இந்தியாவில் 60 ஆண்டுகளுகாக பிபிசி செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அப்போது எல்லாம் வருமானத்துறையினர் ரெய்டு நடத்தவில்லை. ஆனால் இப்போது ரெய்டு போக வேண்டிய அவசியம் என்ன..? குஜராத்தில் நடைபெற்ற மோசமான நடவடிக்கையை அம்பலப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அதில் தற்போது பிரதமராக இருக்கும் மோடி நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார்.

மேலும், அதானியின் ஊழல் முறைகேடு கிட்டத்தட்ட மோடியினுடைய ஆட்சி, அதானியுடைய ஆட்சி என சொல்லக் கூடியது போல் நாட்டில் நடந்து வருகிறது. மோடி எந்த நாட்டிற்கு போனாலும், அதானியுடன் தான் கூடப்போவார். அங்கு தொழில் ஒப்பந்தம் போடுவார். கிட்டத்தட்ட அதானியின் வியாபார ஏஜென்ட் போலதான் மோடி ஆட்சி நடந்து வருகிறது.

இந்தியாவில் ஆளுநர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில் சில ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஆளுநர் பதவி என்பது பாஜக தலைவர்களுக்கு ஆறுதல் பரிசு போல் ஆகிவிட்டது. பாஜகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. எனவே தான் இங்கு உள்ள பாஜக தலைவர்களுக்கு ஆளுநர் பதவி தருகின்றனர். ஆளுநர் பதவிக்கு பாஜக தலைவர்களைத் தவிர தமிழ்நாட்டில் வேறு தகுதியானவர்கள் யாரும் இல்லையா?.

விழுப்புரத்தில் உள்ள பாதுகாப்பு மையத்தில் உள்ள முறைகேடு நடைபெற்று உள்ளது. பெண்கள் மீது பாலியல் வல்லுறவு நடந்துள்ளது. மையத்தில் சேர்க்கப்பட்ட பலர் காணாமல் போயுள்ளனர். இப்படி இந்த பாதுகாப்பு மையம் 15 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கியது. சுயநலம் கருதியே பல பாதுகாப்பு மையங்கள் நடைபெறுகிறது. முறைப்படி இயங்கவில்லை. பாதுகாப்பு மையங்கள் முறைகேடு மையங்களாக மாறியுள்ளது.

எனவே, அந்த காப்பகத்தை நடத்திய நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அதை கண்டு கொள்ளமால் விட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து காப்பகஙகளும் அரசின் நேரடி கண்காணிப்பில் அரசின் பாதுகாப்பில் நடத்தப்பட வேண்டும்.

ஈரோடு கிழக்குத் தேர்தல் அதிமுக-பாஜக படுதோல்வி அடையும். டெபாசிட் வாங்குவதே சந்தேகம் என்ற சூழ்நிலையில், கடைசி நேரத்தில் தில்லு முல்லு செய்கிறது பாஜக என செய்தி வந்துள்ளது. அது நல்லதல்ல எனவும் அதை தமிழ்நாட்டு மக்கள் அதை ஏற்கமாட்டார்கள்.

மேலும் திரிபுராவில் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் போடுகிறார். தேர்தல் விதி அமித்ஷாவுக்கு பொருந்துமா? பொருந்தாதா?, தேர்தல் அறிவித்துவிட்டால், அதிகாரிகள் மக்களையே சந்திக்க கூடாது என விதி உள்ளது. எனவே, தேர்தல் விதிப்படி அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக தில்லு முல்லுகளை செய்தால் அதற்கு உரிய பதிலடியை பாஜகவும், மத்திய அரசும் பெறும். தமிழ்நாட்டில் நடைபெறும் இடைத்தேர்தகளில் இதுபோன்ற முறை தேவையில்லை என்பது தான் எங்களது கருத்து. ஆனால், இதை ஆரம்பித்து வைத்தவர்கள் அதிமுகவினர் தான். இதை பரஸ்பரம் எதிர்காலத்தில் தவிர்ப்பது நல்லது.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பு பற்றி? விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பார் என்பதில் முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை. வந்து விட்டால் பெரிய மாற்றம் ஏற்படப்போவதில்லை. இந்த அறிவிப்பு என்ன விளைவை ஏற்படுத்தும் என பார்க்க வேண்டும். இந்த அறிவிப்பு அங்கு வாழும் தமிழர்களுக்கு கூடுதலான தாக்குதல்களை கட்டவிழ்த்து விடும் என்ற அச்சம்தான் ஏற்படுகிறது.

இலங்கை பொருளாதாரம் தள்ளாடி, கோத்தபய ராஜபக்சே ஓட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களை கொன்று குவிக்கவே பட்ஜெட்டில் 40 சதவீதத்தை ராணுவத்திற்கு செலவு செய்தனர். இனிமே அதை தொடர முடியாது என்ற முடிவுக்கு இலங்கை அரசு வந்துள்ளது, என தெரிவித்தார்.

Views: - 368

0

0