முடிந்தால் நிரூபித்து காட்டுங்க… அரசியலை விட்டு விலக தயார் ; அண்ணாமலை விட்ட சவால்…!!

Author: Babu Lakshmanan
30 March 2024, 7:07 pm
Quick Share

முந்திரி தொழிலாளியை அடித்து கொன்றது தான் திமுக எம்பியின் சாதனை என்றும், திமுகவினர் இங்கு போட்டியிடுவதற்கு அறுகதையற்றவர்கள் என கடலூரில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கடலூர் முதுநகர் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடலூர் பாராளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தங்கர்பச்சானை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திறந்த வேனில் இருந்து வாக்கு சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக அளவில் பாரதிய ஜனதாவின் வாக்குறுதிகள், பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் கொடுக்கும் வாக்குறுதி என அனைத்தும் ஏப்ரல் முதல் வாரம் எட்டாம் தேதிக்குள் வெளியிடப்படும். கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் தங்கர் பச்சான் ஒரு பாட்டாளியுடைய வாழ்க்கையை அற்புதமாக சொல்லக்கூடிய மனிதர். அவரது படங்கள் அனைத்தும் காவியங்களாக எடுத்துள்ளார்.

இதுபோன்று தனித்துவமான வேட்பாளர்களை பாட்டாளி மக்கள் கட்சி நிறுத்தி உள்ளது. திமுக போல் அப்பாக்கள் மந்திரிகளாக இருந்து மகன்களை தேர்தலில் நிற்க வைக்கின்றனர். அது போல இங்கு இல்லை. கடலூரின் முன்னாள் எம்பி ஒரு பாட்டாளியை அடித்து கொலை செய்ததுதான் அவரின் சாதனை. அதனால் திமுக தெளிவாக அவர்கள் நிற்காமல், கூட்டணி கட்சிக்கு சீட்டு ஒதுக்கி உள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அவரின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் முன்கூட்டியே விண்ணப்பித்ததினால் அவர்களுக்கு சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் சின்னம் விவகாரத்தில் யாருக்கும் எந்தவித அநியாயமும் நடக்கவில்லை.

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் பாமக தலைவர் அன்புமணியின் மைத்துனர் காங்கிரஸ் கட்சி சார்பில் கடலூரில் போட்டியிடுகிறார். பாமக கட்சி சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். இதனால்தான் இது சுவாரசியமான களமாக உள்ளது. அரசியல் என்று வந்துவிட்டால் அண்ணன், தம்பி, மாமன், மச்சான் போன்ற எந்த உறவு முறையும் பார்ப்பதில்லை.

எனது சொத்து கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் 117 மடங்கு உயர்ந்திருப்பதை காண்பித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன். நேர்மையான அரசியலை நான் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறேன். கோயம்புத்தூரில் நிச்சயம் மக்கள் எனக்கு ஆதரவளிப்பார்கள், என தெரிவித்தார்.

Views: - 117

0

0