செருப்பை தலையில் தூக்கி வைத்து நடந்தவர்கள் எல்லாம் இன்னைக்கு மேயர் : திமுக பிரமுகர் லியோனி சர்ச்சை பேச்சு… கண்டிப்பாரா திருமா.,?

Author: Babu Lakshmanan
20 May 2022, 12:13 pm
Quick Share

சென்னை : செருப்பை தலையில் தூக்கி வைத்து நடந்து கொண்டிருந்தவர்களை இன்று மேயராக்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று திமுக பிரமுகர் திண்டுக்கல் லியோனி பேசியது கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கும்மிடிபூண்டி திமுக எம்எல்ஏ டிஜே கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில், திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசியதாவது :- சட்டையை கழற்றி கக்கத்தில் வைத்துக் கொண்டு நடந்த சமூகத்தை, செருப்பைத் தலையில் தூக்கிக் கொண்டு இருந்த சமுதாயத்தை மேயராக்கி ‘வணக்கத்திற்குரிய மாண்புமிகு மேயர்’ அவர்களே என அழைக்க வைத்து திராவிட புரட்சியை செய்த தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின், எனக் கூறினார்.

மேலும், பெண்கள் அரட்டை அடித்துக் கொண்டு வெட்டியாக இருப்பார்கள் என்ற நிலையை மாற்றி பெண்களுக்கு ஓட்டுரிமை வாங்கித் தந்தது நீதிக் கட்சி என்றும், பெண்களுக்கு சொத்துரிமை வாங்கித்தந்தது கலைஞர் என்றும் பெண்களுக்கு அரசியலில் 50% இட ஒதுக்கீடு வழங்கியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்றும் லியோனி பேசினார்.

Stalin -Updatenews360

அவரது இந்தப் பேச்சு தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. அவரது இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே, பட்டியலின மக்களை திமுக பிரமுகர்கள் கடுமையாக தாக்கி பேசி வரும் நிலையில், தற்போது திண்டுக்கல் லியோனி மற்றுமொரு கருத்தை கூறியிருப்பது, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களை மேலும் மேலும் காயப்படுத்துவதாக உள்ளது என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே, திமுக அமைப்பு செயலாளரும், எம்பியுமான ஆர்எஸ் பாரதி, ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜட்ஜாக இருந்தார்கள் என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று பேசியிருந்தார். இவரைத் தொடர்ந்து, மற்றொரு திமுக எம்பியான தயாநிதி மாறன், அப்போதைய தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்து மனு வழங்கிய போது, திமுக எம்பிக்களை அவமானப்படுத்தியதாகவும், நாங்கள் எல்லாம் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? என்று கூறியது பெரும் பரபரப்பை கிளப்பியது.

Stalin and thiruma- Updatenews360

பிற கட்சியினர் மற்றும் பிரபலங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை தாக்கிய பேசும் போது கொதித்தெழும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து இதுபோன்று பேசி வருவதை கண்டிக்காதது ஏன்..? என்றும், இனிமேலாவாது பட்டியலின மக்களுக்கு எதிராக திமுகவினர் பேசுவதை தடுத்து நிறுத்த அவர் நடவடிக்கை எடுப்பாரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Views: - 739

0

0