ஹலோ…! மோடி ஜி… நான் ஸ்டாலின் பேசுகிறேன்…! பரபரத்த தமிழக அரசியல் களம்…!
4 August 2020, 9:40 amசென்னை: பிரதமர் மோடியுடன் திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் உரையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டில் முதுகலை மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் 50 சதவீதம் ஒதுக்கீடு வேண்டும் என்பது தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடாகும்.
இந்த இட ஒதுக்கீடு கோரி தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒரு அதிரடியான தீர்ப்பை வழங்கியது.
அதாவது, இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்கும் வகையில் மாநில அரசு, மருத்துவ கவுன்சிலில் 3 பேர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும். அதுவும் 3 மாதங்களில் முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும். அந்த முடிவுப்படி வரும் கல்வியாண்டில் இருந்து அமல்படுத்தவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்புக்கு தமிழக அரசியல் கட்சிகள் பெருவாரியாக வரவேற்பு தெரிவித்தன. இந் நிலையில், பிரதமர் மோடியுடன் திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் உரையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து அவர் மோடியுடன் பேசி உள்ளார். இந்த விவரத்தை ஸ்டாலின் தமது டுவிட்டர் பதிவில் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
ஓபிசி இடஒதுக்கீடு குறித்தும், இட ஒதுக்கீடு குறித்து நான் எழுதிய கடிதம் குறித்தும் பிரதமர் மோடியுடன் பேசினேன். மாநிலத்தில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் பற்றியும் விவாதித்தேன்.
முன்னுரிமை மற்றும் மாநில இட ஒதுக்கீடு சட்டங்களை ஆதரிக்கும் குழு கூட்டத்தை கூட்டுமாறு பிரதமரை வலியுறுத்தினேன். பாதுகாப்பில்லாதவர்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்றும் அவரிடம் வலியுறுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.