முரளிதர ராவுடன் காலை டிபன்…! நட்டா முன்னிலையில் மாலையில் இணைப்பு..! கு.க. செல்வத்தால் திமுக ஷாக்
4 August 2020, 1:58 pmடெல்லி: டெல்லியில் பாஜக மூத்த தலைவர் முரளிதர ராவுடன் திமுகவின் எம்எல்ஏ கு.க. செல்வம் டிபன் சாப்பிட்டு பேசி இருக்கிறார் என்ற தகவல் திமுக தலைமையை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
திமுகவின் தலைமை நிலைய செயலாளர், ஸ்டாலின் எம்எல்ஏவாக இருந்த ஆயிரம் விளக்கு தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ. அறிவாலயத்தில் எப்போதும் காணப்படும் முகங்களில் ஒன்று என்று அடையாளப்படுத்தப்படுபவர் கு.க. செல்வம். ஸ்டாலினுக்கு வெகு நெருக்கம்.
இவரை பற்றி தான் இப்போது தமிழக அரசியல் களங்களில் பேச்சுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. திமுகவில் இருக்கும் அவர் இன்று மாலை 4.30 மணியளிவில் டெல்லியில் பாஜகவில் இணைகிறார். அதுவும் அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக இணைகிறார் என்ற செய்தி தான்.
அவரது இந்த முடிவுக்கு காரணமாக அடையாளம் காட்டப்படுவர்கள் மொத்தம் 2 பேர் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். முதலாமவர் உதயநிதி ஸ்டாலின். மற்றொருவர் சிற்றரசு. இவர் தான் இப்போது சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர். முன்னதாக மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்தவர். உதயநிதி ஸ்டாலினின் தீவிர விசுவாசி.
அவரது பரிந்துரையின் பேரில் தான் சிற்றரசுவுக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி கிடைத்ததாக இன்றும் பேச்சு உண்டு. இந்த பொறுப்பை பெரிதும் எதிர்பார்த்தவர் தான் கு.க. செல்வம். ஆனால் அவரை ஓரங்கட்டிவிட்டு சிற்றரசு டிக் செய்யப்பட்டு உள்ளார். இந்த நியமனத்துக்கு பிறகு, சிற்றரவு நடத்திய அறிமுக கூட்டத்துக்கும் கூட செல்வம் போகாமல் மனம் புழுங்கி இருந்திருக்கிறார்.
அதன் எதிரொலியாக சில நாட்களாக கடும் அதிருப்தியில் இருந்த செல்வத்திடம், பாஜக தலைமை அணுகியதாகவும், சில வாக்குறுதிகளை கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகே திமுகவில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளார் செல்வம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
பிறகு, சென்னையில் இருந்த படியே ரகசியமாக பாஜக தலைவர் எல். முருகனுடன் டெல்லிக்கு பறந்திருக்கிறார். அங்கு இன்று காலை தமிழக பாஜகவின் பொறுப்பாளர் முரளிதர ராவ் வீட்டில் உணவருந்தி உள்ளார். பின்னர் இன்று மாலை தேசிய தலைவர் நட்டா முன்னிலையில் அவர் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைகிறார். விரைவில் அவருக்கு பாஜகவில் முக்கிய பதவி கிடைக்கும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.