ரகசிய அறையா..? சிக்கலில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன்… 3வது நாளாக நீடிக்கும் சோதனை…!!!

Author: Babu Lakshmanan
7 October 2023, 10:41 am
Quick Share

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடத்தில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

கடந்த 2020ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்தது. அதன் பேரில், அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளதாகக் கூறி, திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கம் செய்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், சென்னை அடையாறில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5ம் தேதி அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தி.நகரில் உள்ள அவருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், அவர் தொடர்புடைய 70க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டில் கணக்கில் வராத ரூ.1.20 கோடி பணம் எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அவரது வீட்டில் ரகசிய அறை இருப்பதாகவும் தகவல் எல்லாம் பரவியது. பணத்தை எண்ணுவதற்காக பணம் எண்ணும் இயந்திரத்தை வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்று எண்ணினர். மேலும், சோதனை நடக்கும் இடத்தில் லாக்கரை திறப்பதற்காக சாவியுடன் ஜெகத்ரட்சகன் ஊழியர்களை அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில், திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடத்தில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 462

0

0