24 மணிநேரத்தில் ஆட்சியை கலைத்திருப்பார் ஆளுநர் ரவி… வலது சாரி அரசியலுக்கு முடிவு கட்டுவோம் ; துரை வைகோ விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
27 June 2023, 4:23 pm
Quick Share

மணிப்பூரில் நடந்தது போல வன்முறை தமிழகத்தில் நடைபெற்று இருந்தால் ஆளுநர் ரவி கச்சிதமாக செயல்பட்டிருப்பார் என்றும், 24 மணி நேரத்தில் ஆட்சியை கலைத்திருப்பார்கள் என மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையையும், அந்த வன்முறையை தடுக்க தவறிய மாநில, மத்திய அரசை கண்டித்து கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவர் நவாஸ்கனி, விசிகவின் துணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ் பாலாஜி, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் , மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகி சசிகாந்து செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்பு. கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் 1000க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ கூறியதாவது :- மணிப்பூரில் நடக்கும் கலவரத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க கோரி இங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்தியாவில் வட கிழக்கு மாநிலங்களுக்கு வன்முறை நிறைந்த வரலாறு இருக்கிறது. அதில் மணிப்பூரும் ஒன்று. இந்த வன்முறையில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா விடுதலை அடைந்த போது, மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லை. 1949 அக்டோபர் 15ல் தான் இணைக்கப்பட்டது. 1972ல் தான் மணிப்பூருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது.

ராணுவத்தினருக்கு சிறப்பு அதிகாரம் கொடுக்கப்பட்டு சட்டத்துக்கு புறம்பாக செயல்படுபவரிடம் விசாரணை செய்யலாம், கைது செய்யலாம். சுடவும் முடியும். ஆனால் முந்தைய அரசுகளின் கடுமையான முயற்சியால் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தன வடகிழக்கு மாநிலங்கள். ஆனால் இப்போது மீண்டும் மணிப்பூரில் கலவரம் தாண்டவமாடுகிறது.

இந்த பிரச்சினைக்கு யார் காரணம் என்று நாம் விடை தேடினால், மணிப்பூரின் பெரும்பான்மைவாதம் மேய்கி இன் பட்டியலின சமூகத்தினர். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி மக்கள் பல ஆண்டுகளாக தங்களுக்கு பழங்குடி அந்தஸ்து கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் பொருளாதார ரீதியாக உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றினால் குக்கி பழங்குடியின மக்கள் தங்களது உரிமை பாதிக்கப்படும் என்று போராட்டம் நடத்துகிறார்கள்.

இதனால் ஆங்காங்கே ஏற்பட்ட சிறு மோதல்கள் நாளடைவில் மணிப்பூரில் பெரும் கலவரமாக உருவாக்க உள்ளது. ஆயிரக் கணக்கானவர்கள் வீடுகளை இழந்தனர். ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் உட்பட பலரது வீடுகள் சூறையாடப்பட்டன.

மணிப்பூர் மாநில நிர்வாகம் செயலிழந்து விட்டது. சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று பாஜகவின் ஒன்றிய அமைச்சர், பாஜக ஆளும் மாநிலத்தை குற்றம் சொல்லுகிறார். அங்கிருக்கும் எதிர்க் கட்சிகள் ஒட்டுமொத்தமாக, அம்மாநில முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தார்கள். ஆனால் ஒன்றிய அரசு செவி சாய்க்கவில்லை.

மணிப்பூரில் நடப்பதை போல் வேறு ஏதேனும் ஒரு பாஜக ஆட்சி செய்கிற மாநிலத்தில் ஒரு சதவிகிதம் நடந்து இருந்தால், அந்த மாநிலத்தில் ஆட்சியை கலைத்து இருப்பார்கள். இந்த ஆட்சி கலைத்த வேளையில் பாஜகவினர் பிரதமர் மோடி டபுள் இஞ்சின் சர்கர் வழங்குவோம் என கூறிவிட்டு, அவர்கள் 40% சதவிகிதம் கமிஷன் சர்கார் தான் வழங்கினார்கள். கர்நாடக மக்கள் சரியான பதிலை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இதுவே ( மணிப்பூரில் நடந்தது போல ) தமிழகத்தில் நடைபெற்று இருந்தால் ஆளுநர் ரவி கச்சிதமாக செயல்பட்டிருப்பார். 24 மணி நேரத்தில் ஆட்சியை கலைத்திருப்பார்கள்.

பிரதமர் மோடியும், உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் அமித் ஷாவும் என்ன செய்து கொண்டிருந்தார்கள். அமித் ஷாவோ, இந்த பிரச்சினை வந்து 26 நாட்களுக்கு பிறகு தான் அங்கு செல்கிறார். நாட்டு மக்களை சாதி மத பேதங்களால் பிரிவுபடுத்தி நாட்டு மக்களை பிரிக்க வேண்டும்.

வரலாறு என்பது முக்கியமான விஷயம். அதில் பெருமைப்பட வேண்டிய விஷயங்களும் இருக்கிறது. துயரப்பட வேண்டிய விஷயங்களும் இருக்கிறது. அதனால் தான் வரலாற்றை எல்லாரும் படிக்க வேண்டும். உலகில் அதிக இனப்படுகொலை செய்தவன் ஹிட்லர். இது போன்ற துயர சம்பவம் எதிர்காலத்தில் நடக்க கூடாது என்பதற்காக என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு வரலாறு என்பது சிறந்த படிப்பினை.

மேற்கு தொடர்ச்சி மலையில் யானைக் கூட்டம் உணவுக்காக வாழைத் தோட்டத்தை நாசம் செய்கிறது. அதை பார்த்த விவசாயி வேதனைப்படுகிறார். ஆனால், அதிலும் ஒரு ஆச்சரியம், அதில் ஒரே ஒரு வாழை மட்டும் இருக்கிறது. காரணம், அந்த மரத்தில் குயில் கூடு கட்டி இருந்தது. அந்த குயில் கூட்டை கலைக்க கூடாது என்று அதை யானைகள் ஒன்றும் செய்யவில்லை. அந்த 5 அறிவு ஜூவனுக்கு இருக்கும் எண்ணம் கூட சில மனிதர்களுக்கு இருப்பதில்லை.

வேங்கை வயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்தை குறித்து பேசியவர், சாதி மதம் கடந்து நாம் அனைவரும் மனிதம் போற்றுவோம். வலது சாரி அரசியலுக்கு முடிவு கட்டுவோம். ஆர்எஸ்எஸ், பாஜக அமைப்புக்கு முடிவு கட்டுவோம், என்று கூறினார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய டி. கே. எஸ் இளங்கோவன் கூறியதாவது :- மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் அங்கு ஆட்சி செய்யும் பாஜக தான் மாநிலத்தில் நடக்கும் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாத கையாலாகாத அரசாக பாஜக உள்ளது. சிறுபான்மையினர் மக்களை நசுக்கி விடலாம். இந்த நாட்டை ஒரு மத நாடக மாற்றிவிடலாம் என பாஜகவினர் எண்ணுகிறார்கள்.

மணிப்பூரில் கலவரம் நடப்பதற்கு முன்பு பிரதமர் மோடி அமெரிக்கா செல்லவில்லை. கலவரம் நடந்து கொண்டிருக்கும் போது தான் அமெரிக்கா சென்றார். கலவரம் நடப்பதை கட்டுக்குள் கொண்டு வர அவர்கள் விரும்பவில்லை, என்றும் கூறினார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த சசிகாந்த் செந்தில் கூறியதாவது :-
3 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்களின் போது நாம் சொன்னோம். இது நாளை கிறிஸ்வர்களுக்கோ, தலித்துக்களுக்கோ, மற்றவர்களுக்கோ நடக்கும் என்றோம். அதைத் தான் இன்று பார்க்கிறோம். 56 நாட்களாக மணிப்பூரில் கிறிஸ்தவர்களுக்கு நடக்கிறது.
மணிப்பூர் மக்களுக்கு நடப்பதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அந்த மக்களின் நிலை நாளை நமக்கு நடக்கும்.

அரசியலுக்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று யாராவது சொல்வீர்களேயானால் அது தவறு. அரசியல் விழிப்புணர்வு கட்டாயம் தேவை. நான் 3 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக இருந்திருக்கிறேன். 24 மணி நேரத்தில் கலவரங்களை கட்டுப்படுத்த முடியும். ஆனால், 56 நாட்களாக கலவரம் நடக்கிறதென்றால் இது அரசால் நடத்தப்படும் கலவரம் என்று புரிந்து கொள்ள முடியாதா? அவர்கள் ஆரம்பித்த கலவரத்தை இப்போது எப்படி நிறுத்துவது என்று அவர்களுக்கே தெரியாது.

பாஜகவினரை எங்கு பார்த்தாலும் ஒவ்வொருவரும் மணிப்பூர் குறித்த கேள்விகளை எழுப்புங்கள். மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதை ஒவ்வொருவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். அது மிக அவசியம், எனக் கூறினார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியதாவது:-
மிகப்பெரிய துயரம் ஒரு சமூகத்திற்கு நடக்கும் போது ஒரு நல்லது நடக்கும். உண்மையில் யார் நல்லவர்கள் என்று தெரிந்து கொள்ள உதவும். நமக்கு யார் நண்பர்கள்? நம் நலம் விரும்பிகள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது. மணிப்பூரில் இழந்த உயிர்களுக்கு ஆறுதல் சொல்லாத, மணிப்பூர் படுகொலைகளை கண்டிக்காத கட்சிகள் தமிழகத்தில் இரண்டு இருக்கிறது. ஒன்று பாஜக, மற்றொன்று அதிமுக. இந்த சம்பவத்தை நீங்கள் தெளிவாக மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

1947 சுதந்திரம் பெற்ற ஒரு வாரம், தேசம் முழுவதும் வன்முறை கலவரம். எங்கெல்லாம் இந்துக்கள் அதிகமாக இருக்கிறார்களோ அங்கே இஸ்லாமியர்களும், இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் இந்துக்களும் தாக்கப்படுகிறார்கள். இவ்வளவு கொடுமைகள் நடந்தும் ஒரு வார்த்தை கூட ஆறுதல் சொல்லாமல் இருக்க கூடியவர் அதே பிரதமர் இடத்தில் இருந்த பிரதமர் மோடி தான்.

தேவாலயங்களில், கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் ஒரு நாள் அடையாளமாக கருப்புக்கொடி ஏற்றி கண்டனத்தை பதிவு செய்வோம், எனக் கூறினார்.

நிகழ்ச்சி மேடையில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேசியதாவது :- மணிப்பூரில் நடந்து வரும், அரச பயங்கரவாதத்தை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டம். மணிப்பூர் என்பது இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம். இரண்டாம் உலகப் போரின் இறுதி கட்டம். இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே போர் நடைபெற்றது. ஆனால் அதில் இந்தியா வெற்றி பெற்றது.

ராணுவத்தின் அடக்குமுறைக்கு மணிப்பூர் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்கள் மிகவும் போராட்ட குணமுள்ள மக்கள். மணிப்பூர் இன்று சாதி ரீதியாக தாண்டி, பாஜகவின் கேடு கெட்ட ஆட்சி நடத்தி வருகிறது. இன்றைய பிரதமர் அன்று குஜராத் முதலமைச்சராக இருந்த போது, 2014 ல் ஆட்சிக்கு வந்த போது சொன்னார், எங்கும் அமைதி நிலவும் என்று. ஆனால் மணிப்பூர் பற்றி எரிகிறது.

7.5 கேரட் வைரத்தில் ஜோ பைடன் குடும்பத்துக்கு பிரதமர் மோடி பரிசளிக்கிறார். அதை லஞ்சமாக தான் கருதுகிறேன். அரசியலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று யாராவது சொன்னால் அது தவறு. அரசியல் விழிப்புணர்வு கட்டாயம் தேவை எனவும், நான் 3 மாவட்டத்தில் ஆட்சியராக இருந்திருக்கிறேன். 24 மணிநேரத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த முடியும். ஆனால் 56 நாட்களாக கலவரம் நடக்கிறதென்றால் இது அரசால் நடத்தப்படும் கலவரம் என்று புரிந்து கொள்ள முடியாதா? 2024 ல் மணிப்பூர் இந்தியாவில் முக்கியமானதாக இருக்கும். பாஜகவை நிச்சயமாக அடுத்த தேர்தலில் வீட்டிற்கு அனுப்புவார்கள் அம்மாநில மக்கள், என்று தெரிவித்தார்.

Views: - 344

0

0