ஒரே சென்டரில் படித்த 700 பேர் தேர்ச்சி எப்படி..? டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு… உடந்தையான தமிழக அரசு : இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!!

Author: Babu Lakshmanan
27 March 2023, 12:42 pm
Quick Share

டிஎன்பிஎஸ்சி தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நில அளவர் மற்றும் வரைவாளர் தேர்வில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 700 பேருக்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒரு தேர்வு மையத்தில் இத்தனை பேர் தேர்ச்சி பெற்றிருப்பது முறைகேடுகள் நடத்திருக்கலாம் என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் இது தொடர்பாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

அந்தவகையில், டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு குறித்து சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, அவர் பேசியதாவது :-குரூப் – 4 தேர்வில் தென்காசியில் 2000 பேர் வரை ஒரே தேர்வு மையத்தில் படித்தோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குரூப் 2 தேர்வில் சிலருக்கு வினாத்தாள் எண்கள் மாறி அமைந்திருந்தன; இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அரசு மற்றும் அதிகாரிகள் உடந்தையாக இருந்ததால் தான் 700 பேர் ஒரே மையத்தில் தேர்வு எழுதியுள்ளனர். டிஎன்பிஎஸ்சி தேர்வில் மிகப்பெரிய ஊழல், தவறு நடந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கேட்டுக் கொண்டார்.

Views: - 287

0

0